போலீஸ் பொய் சொல்லுதா? கிணற்றில் டெல்லி வாகனம்!

கு.அசோக்,
அரக்கோணம் அருகே இருசக்கர வாகனத்துடன் கிணற்றில் நபர்கள் விழுந்ததாக வந்த தகவலை அடுத்து தீயணைப்புத் துறையினர் உதவியுடன் காவல் துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின் இரண்டு சக்கர வாகனத்தை மீட்டனர். மேலும் இரண்டு சக்கர வாகனத்துடன் நபர்கள் கிணற்றில் உள்ளனரா என தொடர்ந்து தேடுதல் பணியானது நடைபெற்றது.
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த அம்மனூர் பகுதியில் சாலையோரத்தில் அமைந்துள்ள விவசாய கிணற்றில் இரண்டு சக்கர வாகனத்துடன் நபர்கள் விழுந்துள்ளதாக அரக்கோணம் நகர காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அரக்கோணம் நகர காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் உதவியுடன் நீண்ட தேடுதலுக்கு பின் புதுடில்லி பதிவு எண் கொண்ட பல்சர் வாகனத்தை கிணற்றிலிருந்து மீட்டனர். அதனைத் தொடர்ந்து இரண்டு சக்கர வாகனத்துடன் நபர்கள் விவசாயக் கிணற்றில் மூழ்கினார்களா என்று தொடர்ந்து தேடுதல் பணியானது நடைபெற்றது.
மேலும் இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில் வேடல் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் வழிப்பறியில் ஈடுபட்டதாகவும், அவர்களை தகவலின் பேரில் மடக்கி பிடிக்க காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையின் வளைவில் நிலை தடுமாறிய வாகனம் அருகில் இருந்த விவசாய கிணற்றில் பாய்ந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் காவல்துறையினர் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.
விவசாய கிணற்றில் மீட்கப்பட்ட இருசக்கர வாகனம் புதுடில்லி பதிவு எண் கொண்டது என்பதால் பொதுமக்களின் குற்றச்சாட்டு உண்மை என சந்தேகம் பலருக்கும் எழுகிறது.
போலீஸ் எப்பவுமே இப்படித்தானே சொல்லும்..என்ன செய்வது பழகிடிச்சி?