மருத்துவ உபகரண கடையும் கள்ளச்சாராய தொடர்பும்?! அதிகாரிகள் அதிரடி!!

மருத்துவ உபகரண கடையும் கள்ளச்சாராய தொடர்பும்?! அதிகாரிகள் அதிரடி!!

ஜி.கே.சேகரன்,

வேலூரில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை நிலையத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 லிட்டர் மெத்தனால் பறிமுதல் - கிடங்கு மற்றும் விற்பனை நிலையத்திற்கு சீல் வைத்து அதிகாரிகள் விசாரணை.

 வேலூர்மாவட்டம்,வேலூர் மெயின் பஜாரில் சட்டவிரோதமாக மெத்தனால் பதுக்கி வைத்திருந்த கடை, குடோன் உட்பட 3 இடங்களில் சீல் வைக்கப்பட்டது.மேலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் கிராமத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து 65-க்கும் மேற்பட்ட உயிரிழந்தனர்.

 இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் உரிமம் இல்லாமல் மெத்தனால், கரைப்பான், தெளி இல்லா சாரவி ஆகிய கெமிக்கல் விற்பனை தொடர்பாக மாவட்ட அளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் மெத்தனால் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 அதன்படி, வேலூர் மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமையிலான குழுவினர் கடந்த அக்டோபர் மாதம் முதல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மெத்தனால் விற்பனை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

   இதற்கிடையில், தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக மெத்தனால் விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய நுண்ணறிவு போலீசாருக்கு டிஜிபி உத்தரவிட்டார். இதையடுத்து வேலூர் மாவட்ட மத்திய நுண்ணறிவு பிரிவு எஸ்.ஐ.ராஜேஷ் தலைமையில், விஜி, நித்தியானந்தம், அன்பரசு ஆகியோர் கொண்ட குழுவினர் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள மருந்து கடைகளில் ஆய்வு நடத்தினர்.

   அப்போது, வேலூர் மெயின் பஜாரில் உள்ள ஒரு மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில், மெத்தனால் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.

 இதையடுத்து, வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், வேலூர் துணை கண்காணிப்பாளர் பிரிவித்ராஜ் சவுகான், காவல்துறை ஆய்வாளர்கள் சீனிவாசன், செந்தில்குமார், மத்திய நுண்ணறிவு பிரிவு எஸ்ஐ ராஜேஷ் மற்றும் போலீசார், வருவாய் துறையினர் வேலூர் மெயின் பஜாரில் உள்ள கஸ்தூரி மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில் திடீரென சோதனை நடத்தினர்.

   இதில் சட்டவிரோதமாக மெத்தனால் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடையில் 5 லிட்டரும், சலவன்பேட்டையில் உள்ள குடோனில் 25 லிட்டர் என மொத்தம் 30 லிட்டர் மெத்தனால் பறிமுதல் செய்தனர்.

   மேலும் கடையின் உரிமையாளர் வேலூர் கொசப்பேட்டை சேர்ந்தவர் கஸ்தூரி ரங்கன் என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

   இதில் மும்பையில் இருந்து மெத்தனால் வாங்கி, தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆய்வகங்களுக்கு சட்டவிரோதமாகவும், அனுமதியின்றி விற்பனை செய்தது தெரியவந்தது.இதைதொடர்ந்து, கடை மற்றும் சலவன்பேட்டையில் உள்ள 2 குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

  மேலும், கள்ளச்சாராயம் கும்பலுக்கு மெத்தனால் விற்பனை செய்யப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.