அதிக சீட்டு கேட்டு திமுக - வை நச்சரிக்கும் கூட்டணி கட்சிகள்! 13 சீட்டுதான் மிஞ்சுமா?

ம.பா.கெஜராஜ்,
நாடாளுமன்ற தேர்தல் வரப்போவதற்கான அறிகுறியை தமிழக மக்களுக்கு நினைவூட்டியவர்கள் திமுகவினர் தான். கூட்டணி பேச்சுவார்த்தை என்கிற பெயரில் இந்த அலப்பரைகள் நடந்துவந்த நிலையில், உதிரி கட்சிகளைத்தவிர, முக்கிய கட்சிகள் இன்னும் திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தபாடில்லை.
காங்கிரஸுக்கு தமிழகத்தில் 6 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்த நிலையில், இந்தியா கூட்டணியைத் தலைமை தாங்கும் கட்சி என்ற நிலையிலும், புதிதாக தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் செல்வப்பெருந்தகை அதிக தொகுதிகள் பெற தீவிரம் காட்டி வருகிறார். இதனால் கிட்டத்தட்ட 13 தொகுதி வரை திமுகவிடம் கேட்கிறது காங்கிரஸ்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தும் இந்த நேரத்தில் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அதில், விசிக முன்வைக்கும் தொகுதிகளுக்கு குறைவாக திமுக ஒதுக்க விரும்பினால், தொகுதிப் பங்கீட்டில் கையெழுத்திட வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.
அக்கட்சித் தலைவர் திருமாவளவனும், "3 தனித் தொகுதிகள் , 1 பொதுத் தொகுதியைக் கோரினோம். ஆனால், அதற்கு திமுக சம்மந்திக்கவில்லை. இதனால், 3 தொகுதிகளை ஒதுக்கக் கோரிக்கை வைத்துள்ளோம். நாங்கள் கேட்கும் தொகுதி எண்ணிக்கையிலிருந்து பின் வாங்கப்போவதில்லை" என சொல்லியிருக்கிறார்.
மதிமுகவும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்னும் தன்மையை இழந்து 2006-ம் ஆண்டிலிருந்து பயணித்து வருகிறது. இம்முறை இரண்டு மக்களவைத் தொகுதிகளைப் பெற்று தனித்த சின்னம் குறிப்பாக தன் கட்சியின் சொந்த சின்னமான பம்பரம் சின்னத்தில் நின்று வாக்கு வங்கியை உயர்த்தியே ஆகவேண்டும் என்னும் முடிவில் இருக்கிறது. இதனால், அவர்களும் இரண்டு தொகுதிகளைக் கேட்டு முரண்டு பிடித்து வருகின்றனர். ஆனால், திமுக ஒரு தொகுதியை ஒதுக்கும் என்று தெரிகிறது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் கடந்த முறை பெரும்பாலான நகரப் பகுதிகளில் தனித்து போட்டியிட்டு பல தொகுதிகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருப்பதை சொல்லி பந்தா காட்டுகிறார்களாம்.
இப்படி ஏற்கனவே கூன்ணியில் இருப்பவர்கள் கூடுதல் தொகுதியைக் கேட்டு நெருக்கும் நிலையில், திமுகவுடன் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட்ட்டு சேர்ந்து வென்ற பெற்ற மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியை ஒதுக்க நச்சரிக்கிறார்கள்.
ஆனாலும், திமுக கூட்டணியில் இதுவரை சிபிஎம், சிபிஐ, கொங்கு தேசிய மக்கள் கட்சி, இந்திய முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் மட்டுமே சுமுகமாகப் பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறது.
சிபிஎம், சிபிஐ கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்தத் தொகுதியில் அவர்கள் போட்டி என்பது உறுதி செய்யாமல் இருக்கிறது. ஐயுஎம்எல் கட்சிகள் ராமநாதபுரத்திலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கலில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
திமுக 25 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்ட நிலையில் வெறும் 13 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும் என்கிற சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறது.