அதிமுக சீமானுடன் கூட்டணி! நிர்வாகிகள் கருத்து!

அதிமுக சீமானுடன் கூட்டணி! நிர்வாகிகள் கருத்து!

 ஜி.சாந்தகுமார்,

 நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வி அடைந்தது ஏன்? என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி இன்று 3வது நாளாக ஆலோசனை நடத்தினார்.

  கடந்த 10-ம் தேதி முதல் எடப்பாடி பழனிசாமி தலைமையில்,இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நேற்று 2வது நாள் கூட்டத்தில், சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை தொகுதி வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

  இன்று 3வது நாளாக அரக்கோணம், தஞ்சாவூர், திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் அந்த தொகுதி முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி காலை 9 மணி முதல் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், பங்கேற்ற நிர்வாகிகள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

  இந்நிலையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் சிலர் தெரிவிக்கையில், காலையில் தஞ்சை மாவட்ட கழகத்தினருடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

  அப்போது சட்டமன்ற உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கத்தை (ஓ.பிஎஸ். டீம்) மீண்டும் கட்சியில் இணைத்துக்  கொள்ளலாம என்று கேள்வியெழுந்த போது, அதற்கு தஞ்சை அதிமுகவினர் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள்.

  அதே போல் வரும் 2026 தமிழக சட்டபேரவை தேர்தலில் அதிமுக நாம் தமிழர் கட்சியினருடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்று  பொதுவாக பலரும் தெரிவித்தார்கள் என்கின்றனர்.