அடேங்கப்பா... சிதம்பரம் தொகுதியில் பிரச்சாரத்துக்காக ஏழு அடி உயரத்தில் பானை!

அடேங்கப்பா... சிதம்பரம் தொகுதியில் பிரச்சாரத்துக்காக   ஏழு அடி உயரத்தில் பானை!

டி.இ.முகமது,

 புதுச்சேரியில் தயாரிக்கப்பட்ட ஏழு அடி உயரம் உள்ள 6 பானைகள் சிதம்பரம் தொகுதி பிரசாரத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட  6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ஒரு பெரிய பானை எனவும்இதேபோல், விழுப்புரம் மக்களவை தொகுதிக்கும் பானைகள் செய்து அனுப்பி வைக்கப்படுமாம்.

 இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தை கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் சிதம்பரத்தில் தொல்.திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் பானை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

 இந்நிலையில் `பானை' சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைக்க பெரிய பானையை புதுச்சேரியை சேர்ந்த பழங்குடியினர் விடுதலை இயக்க மாநில செயலாளர் ஏகாம்பரம் தயாரித்து அனுப்பி வைத்திருக்கிறார்.  இதற்காக வில்லியனூரை சேர்ந்த துரை என்ற சிற்ப கலைஞரிடம் 6 பானைகள் செய்வதற்காக 3 நாட்களுக்கு முன்பு ஆர்டர் செய்திருந்தார்.

 இதனை தொடர்ந்து, 4 கலைஞர்கள் இரவு பகல் பாராது உழைத்து பைபரால் ஆன 6 பானைகளை செய்து முடித்துள்ளனர்.

 இந்த பானைகள் ஒவ்வொன்றும் 7 அடி உயரமும் 6 அடி அகலமும் கொண்டவை. இந்த சைஸ் பானை செய்வது இது தான் முதன்முறை. புதுச்சேரியில் தயாரான இந்த மெகா சைஸ் பானைகள் சிதம்பரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.