பொங்கல் விழாவில் பிரியாணி விருந்து அளித்த அதிமுக மா.செ.!
கு.அசோக்,
தித்திக்கும் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகளுக்கு சுட சுட பிரியாணி வழங்கி சமத்துவ பொங்கலை கொண்டாடி மகிழ்ந்த இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுகவினர்
உழவர்களின் திருநாளாக கருதப்படும் தைப்பொங்கல் திருநாள் வருகிற 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமையில் மகளிர் அணியினர் மண்பாண்டத்தில் பொங்கலை வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டு வழிபட்டனர்.
பிறகு சமத்துவ பொங்கல் விழாவில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பொங்கலோ பொங்கலோ என கரகோஷங்களை எழுப்பினர்.
மேடையில் இருந்த கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் மாவட்ட செயலாளர் மரியாதை நிமித்தமாக சால்வை அணித்து வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு சுட சுட பிரியாணி விருந்து அளித்தார்.
முன்னதாக சமத்துவ பொங்கலை கொண்டாடும் விதமாக மாட்டு வண்டியில் உலா வந்து கட்சி நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு "யார் அந்த சார்" என்ற ஸ்டிக்கரை கட்சி நிர்வாகிகளின் வாகனத்தில் ஒட்டி கண்டன கோஷங்கள் வெளிப்படுத்தினார்கள்.