ஒரு வார காலத்திற்கு உலக சாதனை நிகழப்போகிறது! திருப்பத்தூர் ஆட்சியர் சீக்ரெட்!

ஒரு வார காலத்திற்கு உலக சாதனை நிகழப்போகிறது! திருப்பத்தூர் ஆட்சியர் சீக்ரெட்!

 ம.பா.கெஜராஜ்,

 அடுத்த ஒரு வார காலத்திற்கு அது ஒரு உலக சாதனையாக போகிறது என்று ஒரு சீக்ரெட்டை சொல்லியிருக்கிறார் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் சோலூர் கிராமத்தில் உள்ள டி.அப்துல் வஹித் டேனரீஸ் (பி) லிமிடெட் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 15வது குறுங்காடாக,  குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்கள்.

   அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள்.மேலும் மீண்டும் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், மிஷின் லைப் உறுதிமொழியினை ஆட்சித்தலைவர் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

  தமிழநாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழகத்தினை பசுமை தமிழகமாக மாற்ற, மாண்புமிகு சுற்றுச்சூழல் அமைச்சர் அவர்களால் தமிழகம் முழுவதும் 10,000 குறுங்காடுகள் நிறுவுதற்கான திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இதனடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் குறுங்காடுகள் நிறுவ நடவடிக்கை மேற்கொண்டு, திருப்பத்தூர் மாவட்டத்தில் 15வது குறுங்காடு ஆம்பூர் வட்டம் சோலூர் கிராமத்தில் உள்ள டி.அப்துல் வஹித் டேனரிஸ் (பி) லிமிடட், ஆம்பூர் நிறுவனத்தில் 600 மரக்கன்றுகள் சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் நடப்பட்டு குறுங்காடுகள் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைக்கப்பட்டது.

 உயிரினங்களுக்கு தேவையான ஆக்ஸிஜன்

 2023 ஆம் ஆண்டில் திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட 15-வது குறுங்காடு ஆகும்.  மேலும் குறுங்காடுகள் உருவாகுவது தொடர்ந்து நடைபெறும். இத்திட்டத்தினால் காற்றில் உள்ள கார்பண்டை ஆக்ஸைடு வாயுவானது மரங்களினால் உறிஞ்சப்பட்டு, உயிரினங்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் வாயுவாக வெளியேற்றப்படுகிறது.  இதனால் ஆம்பூர் மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள்.

  மரங்களை நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும், இயற்கையை நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். பறவை இனங்கள் பூச்சிகள் விலங்குகள் போன்ற அனைவரும் மனிதர்களுக்கு முன்பாக வந்தவர்களை நாம் அளித்து கொண்டிருக்கின்றோம். திரு.அத்துல் மிஸ்ரா ஐஏஎஸ் அதிகாரி ஆக்சிஜன் இல்லை என்றால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை புத்தகமாக எழுதி இருக்கின்றார்.

வெப்பநிலை அதிகரிப்பு,

  ஒவ்வொரு வருடமும் பல டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து கொண்டே இருக்கின்றது, மரங்களை அதிகமாக வெட்டிக் கொண்டு இருக்கின்றோம், வனவிலங்குகள் இடம் பெயர்கின்றன, பூச்சி இனங்கள் கொல்லப்படுகின்றன, உதாரணமாக ஆஸ்திரேலிய நாட்டில் ஒரு பறவை இனம் மரத்தை வெட்டி விட்ட பிறகு அதன் மூலமாக வாழ்ந்து வந்த அந்த பறவை இனமே அழிந்துவிட்டது.

 ஏனென்றால் அந்தப் பறவை கொட்டையை எச்சத்தில் வெளியிடுகின்ற பொழுது தான் அந்த மரம் முளைக்கின்றது, உதாரணமாக ஆலமரம் அரசமரம் போன்ற மரங்கள் விதைகளை போட்டால் வளர்வதில்லை, எங்கே எல்லா பறவைகள் இருக்கின்றதோ அதன் எச்சத்தின் மூலமாக  விதை வெளியேறி மரம் வளர்கின்றது.

 குறுங்காடு  அமைப்பதன் மூலம் பூச்சி இனங்கள் அதிகமாக வருகின்றது, இதன் மூலமாக மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது. தேனீக்கள் இல்லை என்றால் இந்த நாடு உணவு பற்றாக்குறை ஏற்படும்,  அனைவரும் எந்த ஒரு உயிரினத்தை பற்றியும் கவலைப்படாமல் இருக்கின்றோம்.

 இந்த உலகம் வெப்பமயமாதலை முழுமையாக தடுக்க வேண்டும், ஆக்சிஜன் தேவையான அளவுக்கு கிடைக்க வேண்டும் சுத்தமான காற்றை அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.

பள்ளி மாணவர்கள் ஒரு நல்ல செயல்

 இந்த மரங்களை நாம் ஒவ்வொருவரும்,  ஒவ்வொரு மரம் தினமும் நட முடியும், நட முடியாது என்பது இல்லை ஆனால் நாம் யாருமே அதை செய்வதே இல்லை, வீட்டில் மாம்பழக் கோட்டயை நீங்கள் எடுத்து நட்டு வைத்திருந்தாலும் கூட ஒரு மாமரத்தை உருவாக்கி விட முடியும். நிச்சயமாக செயல்படுத்துகின்ற போது அது வளர்ந்தபின்பு அதனுடைய நிழலில் அமர்கின்ற போது அதை உணர முடியும். எனவே இங்கிருக்கின்ற  பள்ளி மாணவர்கள் ஒரு நல்ல செயலை செய்திருக்கிறார்கள், அனைத்து பிள்ளைகளையும் வரவேற்று அவர்கள் கையால் இந்த செடிகளை நடுகின்ற பொழுது அது வளர்ந்து வருகின்றதை நீங்கள் வந்து இங்கே பார்க்க வேண்டும்.

நீங்கள் நட்டமரத்தை ஒரு பத்து நாட்களுக்கு ஒரு முறையாவது வந்து பாருங்கள் தண்ணீர் ஊற்றபடுகிறதா என்று பாருங்கள் நீங்கள் தண்ணீரை ஊற்றுங்கள். நான் வருவாய் கோட்டாட்சியராக இருந்தபோது ஒரு வீட்டில் தங்கி இருந்தேன் சிறிய குழந்தை தினமும் பள்ளியில் இருந்து வந்தபின்னர் தன்னுடைய வாட்டர் பாட்டில் தண்ணீரை அந்த செடிக்கு விட்டு வரும், அது இன்றைக்கு மிக அழகாக பெரிய மரமாக வளர்ந்து விட்டது.

 ஒரு 10-15 ஆண்டு காலத்தில் அந்த மரமே அந்த இடத்திற்க்கு அழகு சேர்க்கும் ஆகவே இந்த இயற்கையை பாதுகாப்பதில் அனைவரும் தோள் கொடுப்போம். நமது மாவட்டத்தில் 500 குறுங்காடுகளை நாம் உருவாக்குவோம் என்று சொல்லி இருந்தோம். நிச்சயமாக அதை ஒரே நாளில் கூட உருவாக்கி விட முடியும் ஆனால் ஒவ்வொரு இடங்களுக்காக சென்று உருவாக்குகின்ற பொழுது அவர்களோடு கலந்துரையாடலுக்கு சற்று நேரம் கிடைக்கும் என்ற காரணத்தினால் அதை ஒவ்வொரு குறுங்காடாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.

 அதிக எண்ணிக்கையில் மரங்களை நட விரும்புகின்றோம்

 அதுமட்டுமின்றி நமது மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மரங்களை நட விரும்புகின்றோம். அவர் நடுகின்ற பொழுது இந்த பகுதியின் வெப்பநிலை நிச்சயமாக குறையும் உதாரணமாக தமிழ்நாடு முழுவதும் வேலூர் மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் இங்குதான் அதிகமான வெப்பநிலை பதிவாகிறது. அப்போது நாம் அதிகமான மரங்களை நட வேண்டும் நீர் நிலையனுடைய நீர்மட்டத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை நாம் உயர்த்த வேண்டும் அதற்காக 1500 பண்ணை குட்டைகளை வெட்டுவதற்காக கிட்டத்தட்ட தயாராகி விட்டோம்.

  அடுத்த ஒரு வார காலத்திற்கு அது ஒரு உலக சாதனையாக போகிறது.

நமது மாவட்டத்தில் 1500 பண்ணை குட்டைகளை நாம் எடுத்துக்கிறோம் அவ்வாறு வெட்டுகின்ற போது நீர்மட்டம் அளவானது உயரும். நல்ல தண்ணீரை நாம் சேமித்து வைக்க முடியும் அதன் மூலமாக மரங்கள் அதிக அளவிற்கு பெருகும் மழையை நாம் பெருக்க முடியும்.

நமது வெப்பநிலையை குறைக்க முடியும், விவசாயிகளுக்கு நல்ல பொருளாதாரம் வளர்ச்சி கிடைக்கும். அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், ஒரு பசுமை தமிழகத்தை மாற்ற முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

   இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திரு.கோபாலகிருஷ்ணன், வட்டாட்சியர் திருமதி.குமாரி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உதவி பொறியாளர் திரு.கேசவன்;, ஆம்பூர் திஃள். டி. அப்துல் வஹித் டேனரிஸ் (பி) லிமிடட், நிர்வாகிகள், தொழிலதிபர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.