கல்யாணம் முடிந்தும் முதலிரவு நடக்காத கதை! கூட்டணி இருந்தும் பிரச்சாரத்துக்கு வராத பிரதமர்! ஆந்திராவில் குழப்பம்!

வி.டி.வித்யாசாகர்,
ஆந்திராவில் வரும் 13ம்தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனி அணியாகவும், தெலுங்கு தேசம், பாஜக மற்றும் நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சிகள் மற்றொரு அணியாகவும், காங்கிரஸ்- கம்யூனிஸ்ட் ஒரு அணி என மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்த கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
கூட்டணி இல்லாமல் 3வது முறையாக தேர்தல் களம் காணும் முதல்வர் ஜெகன்மோகன், அனைத்து தொகுதிகளிலும் தனி ஆளாக பிரசாரம் செய்து வருகிறார். அதேபோல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் ஆங்காங்கே பிரசாரம் செய்து வருகின்றனர்.
ஆனால் சந்திரபாபு தலைமையிலான கூட்டணியினர் அனைத்து தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இருந்தாலும் கூட பாஜக தரப்பில் மோடியோ, அமித்ஷாவோ அந்த பக்கம் பிரச்சாரத்துக்காக தலைகாட்டாதது நெருடலாகவே பார்க்கப்படுகிறது.
தெலுங்கு தேசம் கட்சி கூட்டணியில் மொத்தமுள்ள 25 மக்களவை தொகுதிகளில் 6 தொகுதிகளும், 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 10 தொகுதிகளும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டன. ஆனால் இந்த தொகுதிகளில் நட்சத்திர பேச்சாளர்கள் இதுவரை பிரசாரம் செய்யாமல் தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் நடந்த மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி பலமுறை வந்து பிரசாரம், ரோடு ஷோக்களை நடத்தினார்.
ஆனால் ஆந்திராவில் இதுவரை ஒரே ஒருமுறை மட்டுமே அமராவதியில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்மையில் தெலங்கானாவில் பிரசாரம் செய்த நிலையில் ஆந்திராவில் பிரசாரம் செய்ய ஆர்வம் காட்டாமல் புறக்கணித்து வருகிறார்.
இதேபோன்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரும் இதுவரை ஆந்திராவில் சொந்த கட்சி வேட்பாளர்களுக்கு கூட பிரசாரம் செய்ய முன்வரவில்லை.
சந்திரபாபு நாயுடு வெளியிடும்போது பாஜகவின் முக்கிய நிர்வாகி அதை வாங்க மறுத்து ஒதுங்கினார். அதற்கு பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டது. பாஜக தலைமைக்கும் இந்த தகவல் பறந்தது.
அதன் காரணமாகவே ஆந்திராவில் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வரவில்லை என்று கூறப்படுகிறது.