டோலிகட்டி தூக்கிச் செல்லப்பட்ட சடலம்! சட்டமன்ற உறுப்பினருக்கு மனசாட்சியே இல்லையா?

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி அருகே மலை கிராமத்தில் இறந்த முதியவரின் உடலை 7 கிலோ மீட்டர் தூரம் டோலி கட்டி தூக்கி சென்ற சோகம். சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகியும் சாலை வசதி இல்லாமல் மலை கிராம மக்கள் வேதனை.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் அமைந்துள்ள நெக்னாமலை கிராமத்தில் 172 குடும்பங்களை சேர்ந்த 750 பேர் வசித்து வருகின்றனர். இந்த மலை கிராமத்திற்கு சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து இன்று வரை சாலை வசதி அமைத்துக் கொடுக்கப்படவில்லை.
மக்கள் அன்றாட தேவைக்கும் மற்றும் மருத்துவ தேவைக்கும் 7 கிலோமீட்டர் நடந்தே சென்று வரக்கூடிய சூழ்நிலையாக உள்ளது.அதே நேரத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவ வலி ஏற்பட்டாலும் சரி, உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் சரி டோலி கட்டி தூக்கிச்செல்லும் அவல நிலையும் தொடாகிறது.
இந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியின் போது மலை கிராம மக்களின் சிரமத்தை அறிந்து அதிமுக கட்சியின் சொந்த நிதியிலிருந்து மண் சாலை அமைத்துக் கொடுக்கப்பட்டது.
ஆனால் அதில் ஸ்திரத்தன்மை இல்லை. ஆகவே தொடர்ந்து அப்பகுதி மக்கள் டோலியை நம்பித்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனை அறிந்த சின்னத்திரை நடிகர் பாலா நெக்னாமலை கிராமத்திற்கு நேரில் சென்று புதிய ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கினார். ஆனால் அந்த ஆம்புலன்ஸ் செல்வதற்கான பாதை கற்கள் பெயர்ந்து பயணிக்க முடியாமல் உள்ளது.
இந்த நிலையில், அந்த மலை கிராமத்தை சேர்ந்த முத்து (78) என்பவர் உடல்நிலை சரியில்லாமல் வேலூரில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அவர் திடீரென நேற்று உயிரிழந்த நிலையில் உயிரிழந்த முதியவரின் உடலை சொந்த ஊரான நெக்னாமலை கிராமத்தில் அடக்கம் செய்யவேண்டும் என்று திட்டமிட்டனர் உறவினர்கள்.
ஆனால் சாலை வசதி இல்லாததால் முத்துவின் சடலத்தை டோலி கட்டி தூக்கி சென்றனர். இதனால் அவதிப்படும் மலைவாழ் மக்கள் எங்க ஊரு எம்.எல்.ஏ.வுக்கு மனசாட்சியே இல்லைங்க என்கின்றனர்.
ஆம்புலன்ஸை இலவசமாக அளித்த பாலாவே சாலையையும் போட்டுக் கொடுத்துவிடுவார் என்று அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நினைக்கிறார் போலும்.
யப்பா...ஸ்டிக்கர் ஒட்டிக்காதீங்கப்பா.