ஆசிட் ஊற்றியவருக்கு 23ஆண்டு சிறை! பரபரப்பு தீர்ப்பு!

கு.அசோக்,
தாய், மகன் மீது ஆசிட் ஊற்றியவருக்கு 23ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பத்தூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பொன்னியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த பிரபுதேவா (42) இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த கோவிந்தராஜ் (48) என்பவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2016 -ம் ஆண்டு மார்ச் மாதம் 27 -ம் தேதி பிரபுதேவாவிற்கும் கோவிந்தராஜிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, கோவிந்தராஜ் வீட்டில் வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து வந்து பிரபுதேவா மீது ஊற்றியுள்ளார்.மேலும் இதை தடுக்க வந்த பிரபுதேவாவின் தாய் சென்னம்மாள் (54) மீதும் ஆசிட் ஊற்றினார். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதுகுறித்து பிரபுதேவா கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்தனர். இதனை தொடர்ந்து திருப்பத்தூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்துள்ளது
இந்த வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி ஆசிட் ஊற்றி கொலை முயற்சியில் ஈடுபட்ட கோவிந்தராஜிக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
பின்னர் அவரை திருப்பத்தூர் நகர போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.