சமயபுரம் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி லாக்கப் டெத்!

வ.மகேசு,
சமயபுரம் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரத்தில் காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து கூறப்படுவதாவது,
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் அம்மனை தரிசனம் செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற சம்பவங்களை தடுக்கவும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்படியிருக்க, நேற்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர் ஒருவரிடம் செல்போன் திருட முயற்சி செய்ததாக அரியலூர் மாவட்டம் ஓரியூர் என்ற பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரை கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பிடித்து சமயபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அந்த நபரை போலீசார் லாக்கப்பில் வைத்தனராம்.
அந்த சூழலில் காவல் நிலையத்தில் அவர் உயிரிழந்தார்.
காவல் நிலையத்திலுள்ள கழிவறையில் உள்ள ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறுகின்றனர். அதற்காக முருகானந்தம் தனது இடுப்பில் கட்டி இருந்த அரைஞான் கயிற்றை பயன்படுத்தினாராம்.
இதில் சந்தேகம் என்னவென்றால், காலை 11 மணி அளவில் முருகானந்தம் இறந்துவிட்டாராம். ஆனால் மாலை 4 மணி வரை முருகானந்தத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் எடுத்துச் செல்லவில்லையாம்.
இது குறித்து அறிந்த திருச்சி சரக டி.ஐ.ஜி சரவணசுந்தர், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் , மண்ணச்சநல்லூர் தாசில்தார் சக்திவேல் முருகன் மற்றும் போலிஸ் அதிகாரிகள் சமயபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் விசரணை செய்தார்கள்.
அதன் பின்னரே முருகானந்தத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக திருச்சி டிஐஜி சரவணசுந்தர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், "உயிரிழந்த நபரை சமயபுரம் கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் பக்தர்களிடம் செல்போன் திருட முயற்சி செய்வதாக சமயபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர் . அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவர் பாத்ரூமில் அரைஞாண் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைதொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அதன் உண்மை தன்மைக்கேற்ப விசாரணை நடத்தி போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதால் அவர் உயிரிழந்ததாக தெரிய வந்தால் பாரபட்சமில்லாமல் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் போலீஸ் நிலையம் வரும் நபர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து லால்குடி டிஎஸ்பி சீதாராமன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், உயிரிழந்த நபர் கடந்த 2021-ஆம் ஆண்டு தனது தாயை கொன்றதாக அவர் மீது வழக்கு உள்ளது" இவ்வாறு கூறினார்.
இதனிடையே, சமயபுரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தில் பணியின் போது கவனக்குறைவாக இருந்ததாக காவலர் ராம்கி பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.