டு வீலரில் கடத்தப்பட்ட 120 கிலோ போதை புகையிலை!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனங்களில் கடத்திச் செல்லப்பட்ட சுமார் ரூ. ஒன்றரை லட்சம் மதிப்புள்ள 120 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு டூ வீலர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு அழகை நகர் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் இரு சக்கர வாகனங்களில் வந்த நால்வரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர்கள் அழகை நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், முகில்வண்ணம் பிள்ளை தெருவை சேர்ந்த கணேசன், பிடிஆர் நகரை சேர்ந்த நவநீதன், தென்காசி மாவட்டம் சங்கரன் கோயிலை சேர்ந்த சங்கர் என்பது தெரிய வந்தது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா மற்றும் பான்மசாலா பொருட்களை மறைத்து வைத்து கடத்தி சென்று கொண்டிருப்பது அவர்களது வாகனங்களை சோதனையிட்ட போது தெரிய வந்தது.
இதனை அடுத்து நால்வரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்கள் கடத்தி சென்ற சுமார் ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப் பட்ட இரண்டு டூ வீலர்களையும் பறிமுதல் செய்தனர்.