என் மகளை பார்க்க முடியவில்லையே...உதவி ஆய்வாளரின் ஆதங்க ஆடியோ! டிஜிபி சைலேந்திரபாபு விசாரணை!

என் மகளை பார்க்க முடியவில்லையே...உதவி ஆய்வாளரின் ஆதங்க ஆடியோ! டிஜிபி சைலேந்திரபாபு விசாரணை!
: :

கே.ஏ.ஜெகதீஷ்வரி,

 என் மகளை பார்க்க முடியவில்லையே என்கிற காவல் உதவி ஆய்வாளரின் ஆதங்க ஆடியோ வெளியான நிலையில், அது தமிழக காவல் துறை இயக்குநர் முனைவர் சி.டிஜிபி சைலேந்திரபாபு இ.கா.ப.அவர்களின் பார்வைக்கு சென்றது.

  அதன் பேரில் அவர் பாளையங்கோட்டைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்

மேற்படி டி.ஜி.பி.யின் பார்வைக்கு சென்ற ஆடியோவின் விவரம் வருமாறு,

   தமிழக காவல் துறை நண்பர்களுக்கு என் அன்பு கலந்த வணக்கம். என்னுடைய பெயர் அருணாச்சலம். நான் திருநெல்வேலி மாநாகர காவல் துறை, பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறேன்.

 எனது சிறுவயதிலிருந்தே காவல் துறையில் சேர்ந்து நிறைய சாதிக்க வேண்டும் என்பதால், என்னை வேறு எந்த வேலைக்கும் தயார் படுத்திக் கொள்ளவில்லை.

  அதன் விளைவாக கடந்த 2002 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராகவும், 2012 ஆம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளராகவும் தேர்ச்சி பெற்றேன்.

  கடந்த 20 வருடங்களில் நான் வேலை செய்த இடங்களில் எல்லாம் மிகுந்த மரியாதையும் நன் மதிப்பையும் பெற்றவன்.

 சென்ற வருடம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரிந்த போது எனது ஓய்வு நேரம் மிகக்குறைவாக இருந்த போதும், மிகுந்த உற்சாகத்துடன் வேலை செய்தேன்.

  காரணம் எனது அர்பணிப்பான வேலையை பாராட்ட மனங்கள் இருந்தது.

 ஆதலால் என் உடல் பல்வீனத்தையும்,கவலைகளையும் மறந்து வேலை செய்தேன்.

 ஆனால் கடந்த மூன்று மாதங்களாக, திருநெல்வேலி மாநகரத்தில், நான் மிகுந்த மனஉளைச்சலுடன் வேலை செய்து வருகிறேன்.

  காவல் துறையில் குற்றங்களை கண்டுபிடிப்பது மிக மிக எளிது, அதை நிவர்த்தி செய்யவேண்டும் என்பது கடினமான செயல்.

  அதிலும் பாளையங் கோட்டை போன்ற பெரிய காவல் நிலையங்களில் ஒரு காவலரை கண்டிப்பதற்கு உயர் அதிகாரிகளுக்கு நிறைய வழிகள் உள்ளது.

  இந்த பதிவை போடுவதால் எனக்கும் தண்டனை கிடைக்கும் என்பதை தெரிந்தே இந்த பதிவை நான் பதிவிடுகிறேன்.

  தெரிந்தே செய்கிறாயே முட்டாள் என்பவர்களுக்கு, ஒவ்வொருவருக்கும் எண்ணங்கள் ஒவ்வொரு விதமாக தோன்றும். எனக்கு 40 வயது ஆன போதும் உடல் வலிமை நன்றாகவே உள்ளது.

  ஆனால் உயர் ரத்த அழுத்தத்தினால் இதயம் பலவீனமாக உள்ளது.

  தண்டனைக்கு பயந்து மௌனம் காத்து நின்றால் அதனால் டிப்ரஷன் அதிகமாகி ஒருவேளை என் இதயம் துடிப்பதை மறந்து விட்டால் எனது குடும்ப உறவுகள் நடுத் தெருவுக்கு வந்துவிடும்.

   அதை விட எனது மனக் குமுறலை வெளிக்காட்டி தண்டனை அனுபவிப்பதை தவறாக நினைக்கவில்லை.

   கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக நான் விடுப்பு எடுத்த நாட்கள் ஒரு விரல்... கைக்குள் அடங்கி விடும்.

  திருமண நாள், பிறந்த நாள் முதற்கொண்டு ஓய்வெடுக்காமல் வேலை செய்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.

  கடந்த 10 மாதங்களில் ஒரு நாள் கூட தொடர்ந்து 5 மணி நேரம் நான் உறங்கியது இல்லை.

  எனது அன்பு மகள் உறங்கிய பின் வீட்டுக்கு வருவதும் காலையில் விழிக்கும் முன்பாக நான் வேலைக்கு செல்வது வாடிக்கையான ஒன்று.

 குழந்தைகள் என்னை பத்து நிமிடமாவது  எங்களுடன் விளையாட அழைக்கும் போது, அதற்கான நேரத்தை ஒதுக்கக் கூட முடியாமல் நான் காவல் பணியில் இருந்து வருகிறேன்.

 இருப்பினும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதை உணருகிறேன். என்னிடம் குறைகள் ஏதேனும் இருப்பினும் இன்றுவரை தலை நிமிர்ந்து நிற்கிறேன்.    ஆனால் இன்று அதில் நான் தவறு செய்ததாக உணருகிறேன்.

 இந்த பதிவை நான் போடுவதற்காக என்னை அலுவல் ரீதியாக எப்படி வேண்டுமானாலும் தண்டிக்கலாம் அதையும் நான் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன். காவல் பணியில் எனது பணி தொடருமா என்பது கேள்விக்குறியே.

என்று மனவேதனையோடு எஸ்.ஐ.அருணாச்சலம் அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

   இந்த ஆடியோவில் பேசியிருப்பது பாளையங்கோட்டை எஸ். ஐ. அருணாச்சலம் தானா, ஏன் அவருக்கு இந்த விரக்தி அதற்கு காரணம் யார் என்று திருநெல்வேலி மாநகர காவல் வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம்.

   மேற்படி எஸ். ஐ. அருணாசலம் தான் அந்த ஆடியோவில் பேசியுள்ளார். அவரது உயர் அதிகாரிகளின் பார்வைக்கு சில தகவலை சுட்டிக்காட்ட போலிஸ் குரூப்பில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வெளியில் பரவியுள்ளது.

   மேலும் இந்த டார்ச்சருக்கு முக்கிய காரணம் டிசியாக உள்ள சுரேஷ்குமார் தானாம். அவரால் பாளையங்க்கோட்டை டிவிஷனில் உள்ள பல காவல் அதிகாரிகளுக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருப்பதாகவும், அப்படி அவரால் பாதிக்கப்பட்டவர்களில் அருணாசலமும் ஒருவர் என்றும் கூறப்படுகிறது.  

 காவல் துறையினருக்கு என்னதான் வார விடுப்பு, உய்வு போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தினாலும், ஒரு சில உயரதிகாரிகளின் அண்ணாச்சிதனமான செயல்களால் கீழ்மட்ட அதிகாரிகள் இப்படி மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

 இது உடனடியாக தவிர்க்கபட வேண்டும் என்பது காவல் துறையினரின் மனவிருப்பம்.

  இது தொடர்பாக தமிழக டிஜிபி முனைவர் சி.சைலேந்திரபாபு அவர்கள் பாளையங்கோட்டைக்கு வந்து நேரடியாக ஆய்வு நடத்தி விசாரணை செய்தார். அப்போது மேற்படி ஆடியோ வெளியிட்ட எஸ்.ஐ. அருணாச்சலத்துக்கு அவர் அறிவுறை வழங்கியதோடு, காவலர்களின் குடும்பங்களிடமும், காவல் அதிகாரிளுடனும் கலந்துரையாடல் நடத்தினார்.

  இதில்  தென்மண்டல காவல் துறை தலைவர் திரு.T.S.அன்பு இ.கா.ப அவர்கள்,  நெல்லை  மாநகர காவல் ஆணையாளர் திரு.N.K.செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப அவர்கள், நெல்லை சரக காவல் துறை துணை தலைவர் திரு.பிரவீன் குமார் அபினபு இ.கா.ப அவர்கள், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மணிவண்ணன் இ.கா.ப.,அவர்கள், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பத்ரிநாராயணன் இ.கா.ப அவர்கள்,தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் அவர்கள் மற்றும் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்கள்  திரு.T.P.சுரேஷ்குமார் சட்டம் மற்றும் ஒழுங்கு அவர்கள், திரு.K.சுரேஷ்குமார் குற்றம் மற்றும் போக்குவரத்து அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.