சார்பதிவாளர் மீது காவல் நிலையத்தில் புகார்!

சார்பதிவாளர் மீது காவல் நிலையத்தில் புகார்!

கு.அசோக்

   சார்பதிவாளர் அலுவலகத்தில் தொடரும் போலி பத்திர பதிவுகளுக்கு உடந்தையாக இருந்த சார்பதிவாளர் உமாபதி தற்காலிக பணியிடை நீக்கம்  செய்து பத்திரப்பதிவுதுறை  ஐஜி அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் வாணியம்பாடி பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் சொத்துக்குரிய உரிமையாளர்ளுக்கு தெரியாமலேயே போலி நபர்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து பத்திரப் பதிவுகள் நடைபெற்று வந்தது.

  கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடி நியூட்டன் ஜீவா நகர் பகுதியை சார்ந்த பேபி அம்மாள் என்பவர் இறந்து இரண்டு மாதம் ஆன நிலையில் பேபி அம்மாள் உயிருடன் வந்து தனது சொத்தை அஹமத் பாஷா என்பவருக்கு சொத்துக்கான பவர் கொடுத்தது போல செட்டப் செய்யப்பட்டது.

 இது குறித்த புகார் நிலுவையில் இருக்கும் நிலையில் தமிழக பத்திரப்பதிவு ஆணையர் சிவனருள் இ.ஆ.ப. அவர்கள் போலி பத்திர பதிவு மேற்கொள்ளும் சார்பதிவாளர்கள் முறையாக விசாரிக்காமல் பத்திரப்பதிவு செய்வது நிருபணம் ஆனால்  அவர்களும் சிறைக்கு செல்ல வேண்டி வரும் என எச்சரித்திருந்தார்.

 இந்நிலையில் வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 6 மாத காலமாக கூடுதல் சார்பதிவாளராக பணிபுரிந்து வரும் உமாபதி முறையாக பத்திரப்பதிவு விசாரணை செய்யப்படாமல் சொத்துக்குறிய நபரின் அனுமதி இல்லாமல்  போலியான ஆவணங்கள் மூலம்  ஆள்மாறாட்டம் செய்து பத்திரப்பதிவுகளை செய்து வந்துள்ளார்.

 இதே போல் கடந்த இரு தினங்களுக்கு முன் வாணியம்பாடி கேத்தாண்டப்பட்டி அடுத்த சஞ்சீவனூர் கிராமத்தை சேர்ந்த மணி என்பவரின் மூன்று ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவருக்கு கிரையம் செய்து பதிந்துள்ளார்.

 நிலத்தின் உரிமையாளர் மணிக்கு தெரியாமலேயே இந்த  கிரையம் பதிவு செய்து கொடுத்துள்ள சம்பவம் பின்னர் தெரியவந்தது.

 மேலும் இந்த பத்திரப்பதிவில் அனுமதி பெற்ற பத்திர எழுத்தர் யாருமின்றி தனிநபர் மூலம் அவர்களாகவே தயாரித்த பத்திரங்களை சரிவர சரி பார்க்காமல் பத்திர எழுத்தர் கவனக்குறைவாக பத்திர பதிவு செய்து உள்ளார்.

  இது குறித்து நிலத்தின் உரிமையாளர்கள் பத்திரப்பதிவாளரிடம் நியாயம் கேட்டபொழுது ஏதேனும் தவறு இருந்தால் நீங்கள் நீதிமன்றத்தை அணுகி கொள்ளுங்கள் என அலட்சியமாக பதில் கூறியதாக தெரிகிறது.

 இதுதொடர்பாக நிலத்தின் உரிமையாளர் மணி வாணியம்பாடி சார் பதிவாளர்  உமாபதி மீது பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி.மற்றும் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் தனி நபர் மூலம் தயாரித்து போலிப் பத்திரங்களை சரிவர கவனிக்காமல்  கவனக்குறைவால் பத்திரப்பதிவு செய்து  பொதுமக்களை அலட்சியப்படுத்தும் வகையில் செயல்பட்ட சார்பதிவாளர் உமாபதியை  தற்காலிக பணியிடை நீக்கம் செய்து பத்திரப்பதிவு துறை ஐ.ஜி அதிரடி நடவடிக்கைமெடுத்துள்ளார்.

இதனை பலரும் பாராட்டுகின்றனர்.