ஓ....இதுக்கு பேரு தான் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனையா?

ஓ....இதுக்கு பேரு தான் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனையா?

கு.அசோக், 

  மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக  தரம் உயர்த்தப்பட்ட திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் அவல நிலை. நோயாளிகளுடன் வரும் உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கழிவறை கூட இல்லாமல் அவதி

 திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், அந்த மருத்துவமனைக்கு திருப்பத்தூரை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து வரும் பல்வேறு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  மேற்படி திருப்பத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டாலும் பல அடிப்படை வசதிகள் இன்றியும், உயர்தர சிகிச்சைகள் இன்றியும், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அவதியுருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் நோயாளிகளுடன் உதவிக்கு வரும் உறவினர்களுக்கு கழிவறை வசதி இல்லை, ஏற்கனவே இருந்த கழிவறையை இடித்துவிட்டு ஆக்சிடென்ட் கொள்கலன் பிளான்ட் அமைத்து இருக்கிறார்கள்.

 நோயாளிகளுடன் வரும் உதவியாளர்களுக்கு காத்திருப்பு அறை இல்லை, ஆறு மாத காலமாக நகராட்சி நிர்வாகம் அரசு மருத்துவமனையில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தாமல் உள்ளனர்.

    ஏற்கனவே ஒரு வியாதிக்கு சிகிச்சைக்காக வந்திருக்கும் எங்களுக்கு கூடுதலாக கொசுக்களின் மூலமாக டெங்கு மலேரியா போன்ற நோய்கள் உருவாகக்கூடிய அபாயம் உள்ளது.

 இந்த அசுத்தமான சூழலினால் ஏற்படும் இதர நோய்களால் கொரோனோ அச்சுறுத்தலை விட அதிகமாக உள்ளது.

  பிணவறையில் அடையாளம் தெரியாத பிணங்களை வைக்க குளிர்சாதன பெட்டி வசதி இல்லை.

  திறந்த நிலையிலேயே பிணங்களை வைத்திருப்பதால் துர்நாற்றம் வீசும் அவல நிலையில்தான் தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனை இயங்குகிறது.

  காய்ச்சல், பிரசவம் அடிதடியில் காயம் பட்டவர்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 விஷம் குடித்த கேஸ், எலும்பு முறிவு, தலையில் அடிபடுவது, கர்ப்பப்பை கட்டி உள்ளிட்ட பலதரப்பட்ட சிகிச்சைகளுக்கு  முதலுதவி மட்டும் செய்துவிட்டு மேல் சிகிச்சை என்கிற பெயரில் மருத்துவர் பற்றாக்குறையால் தர்மபுரி மற்றும் வேலூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துவிடுகின்றனர்.

  அதுபோன்ற சமயங்களில் எந்தப் பக்கம் சென்றாலும் 90 கிலோமீட்டர் தொலைவை கடந்து சிகிச்சை பெறவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

 இதனால் ஏற்படும் கால தாமதத்தினால் எத்தனையோ பேர் போகிற வழியிலேயே இறந்து விடுகின்றனர்.

  மருத்துவமனைக்குள் வருகின்ற வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு உரிய இட வசதி இல்லாததால் திடீரென அவசர வாகன ஊர்தி மருத்துவமனைக்குள் நுழையும்போது நெரிசல் ஏற்படுகிறது.

  இரவு நேரங்களில் விளக்குகள் இல்லாமல் மருத்துவமனை வளாகத்தில் பல இடங்களில் இருண்டு போய் இருப்பதால் நகை பறிப்பு போன்ற சமூக விரோதிககளும், மதுப் பிரியர்களின் அட்டகாசத்தாலும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளனர்.

  எனவே பல கோடிகளை செலவு செய்து கட்டப்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகள் மருத்துவர்கள் பொதுமக்களின் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கவனத்தில் கொண்டு தீர்வு அளிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின்  கருத்தாக உள்ளது.

 ஓ....இதுக்கு பேரு தான் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனையா?