விளாடிமரிடம் மோடி என்ன பேசினார்?  5 ஆண்டுகள் கழித்து ரஷியா சென்ற பிரதமர்! ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு!

Naresh.N.

   பிரதமர் மோடி, ரஷியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். நேற்று அவர் முதலில் ரஷியாவுக்கு புறப்பட்டு சென்றார். தலைநகர் மாஸ்கோ சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் அந்நாட்டு மூத்த துணைப் பிரதமர் டெனிஸ் மான்டுரோவ் வரவேற்றார். பின்னர் அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி ராணுவ மரியாதையும் சிவப்புகம்பள வரவேற்பும் வழங்கப்பட்டது.

  பின்னர் பிரதமர் மோடியும் மாண்டுரோவும் ஒரே காரில் அங்கிருந்து ஓட்டலுக்கு சென்றனர். சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யா சென்றிருந்த போது அந்நாட்டு துணைப் பிரதமர் அவரை விமான நிலையத்தில் வரவேற்றார். ஆனால் துணைப் பிரதமரைவிட மூத்தவரான மாண்டுரோவ் பிரதமா ¢மோடியை வரவேற்றார். இதன்மூலம் இந்தியாவுடனான நட்புறவுக்கு ரஷ்யா எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை உணர முடியும்.

 இதையடுத்து பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரவு விருந்து அளித்தார். அப்போது இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சர்வதேசவிவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

 இந்த சந்திப்பின்போது மோடி, ரஷியா - உக்ரைன் போரின் பினன்ணியில் புதினிடம் 'இது போருக்கான சகாப்தம் அல்ல' என்று பேசியுள்ளதாகவும் மாஸ்கோ வாட்டரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, உக்ரைனின் இறையாண்மை குறித்து புதினிடம் மோடி வலியுறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது நினைவு கூறத்தக்கது ஆகும்.

 22-வது உச்சி மாநாடு:

இரண்டாம் நாளான இன்று பிரதமர் மோடி தொழிலதிபர்கள், மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் இந்தியா, ரஷ்யா இடையிலான 22-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் இரு தலைவர்களும் தனியாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளனர்.

  பின்னர் இரு தலைவர்களின் தலைமையில் இருதரப்பு பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அப்போது இரு நாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  அதன்பிறகு  ரஷ்ய பயணத்தை முடித்துக் கொள்ளும் பிரதமர் மோடி ஆஸ்திரியா தலைநகர் வியன்னா செல்கிறார்.

5 ஆண்டுக்குப் பிறகு: 

  கடந்த 2019-ம் ஆண்டு ரஷ்யாவின் விளாடிவாஸ்டோக் நகரில் பொருளாதார மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன் பிறகு 5 ஆண்டுகள் கழித்து பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

மேலும், கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. அதன் பிறகு பிரதமர் மோடி ரஷ்யா சென்றிருப்பது இதுதான் முதல் முறை என்பது கவனிக்கப்படக் கூடியதாக உள்ளது.