விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்! மனைவி பிரேமலதா தகவல்!

உ.சசிகுமார்,
தேமுதிக தலைவரான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், அவர் நலமுடன் உள்ளார் என்று அவரது மனைவி பிரேமலதா வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவருக்கு இருந்த நீரிழிவு பிரச்சினையால், வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, அந்த விரல் அகற்றப்பட்டது.
வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு பருவமழையால் இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டன. இதையடுத்து, சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) இருக்கும் அவருக்கு சில நேரங்களில் தானாக சுவாசிப்பதில் சிரமம் இருப்பதால், செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.
அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து, உரிய சிகிச்சைகளை அளித்து வந்த நிலையில், அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நுரையீரல் உள்ளிட்ட துறைகளின் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விஜயகாந்த் உடல்நிலை குறித்து மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரித்வி மோகன்தாஸ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'விஜயகாந்த் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது' என்று தெரிவித்துள்ளார்.
அந்த செய்திக்குறிப்பு வெளியானதும் தேமுதிக தொண்டர்களும், அவரது நலம் விரும்பிகளும் அச்சமடைந்தனர்.
இந்நிலையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா நேற்று இரவுவெளியிட்ட வீடியோவில், விஜயகாந்த் உடல் நலம் குறித்து மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஓர் வழக்கமான ஒன்று தான். அதைப் பார்த்து பயப்படவோ,பதற்றப்படவோ தேவையில்லை. விரைவில் அவர் பூரண உடல்நலம் பெற்று வீடு திரும்புவார். எனவே, யாரும் எவ்வித வதந்திகளையும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.