ஆன்லைன் நுகர்வோர்க்கு ஏற்ப சட்டதிருத்தம் தேவை!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
அகில இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் ராஜபாளையத்தில் நடைபெற்ற ஒரு நாள் பயிற்சி முகாமில், 10 மாவட்டங்களில் இருந்து 50 கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள முறம்பில் உள்ள மாவட்ட நுகர்வோர் மைய தலைமை அலுவலகத்தில், அகில இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இம் முகாமில் மதுரை, நெல்லை, குமரி, நாகை, விருதுநகர், தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இருந்து கிளை நிர்வாகிகள் 50 பேர் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுக்கும், நுகர்வோர் ஆர்வலர்களுக்குமான வழிகாட்டு நெறி முறைகள் குறித்து மாநில நிர்வாகிகள் பயிற்சி அளித்தனர். குறிப்பாக நுகர்வோர் குழுக்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், நுகர்வோர் அமைப்பு மட்டத்தில் புகார்களை கையாளுதல்,
நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் தொடுக்கப்பட வேண்டிய புகார்களின் தன்மைகள், நுகர்வோர் அமைப்புகள் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுப்பது, விழிப்புணர்வு கூட்டத்திற்கான நிதி வசதி தேடல் மற்றும் செலவினங்களை சமர்ப்பித்தல்,நுகர்வோர் அமைப்பு தொடர்புடைய தொழில்முறை சங்கங்கள், வர்த்தக சபை உள்ளிட்டவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், பத்திரிக்கைகளை கையாளுதல், உறுப்பினர் சேர்க்கையில் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள், நுகர்வோர் ஆர்வலர்களுக்கான நடத்தை நெறிமுறைகள் மற்றும் நெறிமுறைகளுக்கு முரண்பாடாக செயல்படுவதால் கிடைக்கும் தண்டனைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
மேலும் நுகர்வோர் சட்ட திட்டங்கள், தற்கால ஆன்லைன் வியாபாரம் உள்ளிட்ட கால சூழலுக்கு ஏற்ப திருத்தப்பட்ட வேண்டிய சட்டங்கள் குறித்தும், நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படும் போது உடனிருந்து முறையாக வழக்கு தொடர்ந்து நீதி பெற்றுத் தரக்கூடிய வழிமுறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.