மீன் பண்ணை மின்வயரில் சிக்கி இருவர் பலி! மூடி மறைக்க கூட்டு சேர்ந்த அதிகாரிகள்!

எஸ்.முனுசாமி,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம், மிட்ட அள்ளி ஊராட்சியில் உள்ள தாளமடுவு அண்ணா கொட்டாய் பகுதியில் அணை மீன், கெளுத்தி மீன் பண்ணை செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இவற்றுக்கு தமிழக அரசு ஏற்கனவே தடைவிதித்திருக்கிறது.
இருந்த போதும் உள்ளூர் அதிகாரிகளின் துணையுடன் பெரிய தொட்டிகளை அமைத்து மீன் பண்ணைகள் செயல்பட்டு வருகிறது.
அரசின் உத்தரவை உதாசீனம் செய்யும் அவர்களுக்கு அப்பகுதி ஊராட்சி முதல், வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வரை பாதுகாப்பாக உள்ளனர்.
இவர்களின் கூட்டு மோசடியால 2 உயிர்கள் பறி போயுள்ளது.
ஆனால் அதை அப்படியே மூடி மறைத்துவிட்டனர்.
கடந்த 10.12.2024 அன்று மாலை சுமார் 4.30 மணியளவில் தாளமடுவை சேர்ந்த 70 வயதான வெற்றிலை வியாபாரி மணி முதலியார் மற்றும் பெரியாம்பட்டியை சேர்ந்த ஜேசிபி உரிமையாளர் 35 வயதான வேலு ஆகிய 2 பேரும் தடை செய்யப்பட்ட அணை மீன்களை வளர்ப்பதற்கான மிகப்பெரிய நீர் தொட்டியை அமைத்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது இந்நிலத்தில் இருந்த மின் வயர் அறுந்து விழுந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். ஆனால் இருவருடைய உடலையும் சம்பவ இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு கொண்டுவந்து மின்சாரத் துறையின் மீது பழியை போட்டு திசை திருப்பிவிட்டனர்.
உண்மை சம்பவத்தை மாற்றியும், தடயங்களை அழித்ததுடன், அரசிடமிருந்து இழப்பீடு பெற்று தருவதாக கூறி பலியான ஜேசிபி உரிமையாளர் வேலு உறவினர்களிடம் சமரச பேசியிருக்கிறார்கள்.
சம்பவதன்று இரவு 10.30 மணிவரை காவேரிப்பட்டிணம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சரவணன், சிஐடி நவித் பாஷா மற்றும் தலைமை காவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் இந்த பஞ்சாயத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தை மிட்ட அள்ளி கிராம நிர்வாக அலுவலர் வனிஜா, காவேரிப்பட்டிணம் வருவாய் ஆய்வாளர் புஷ்பலதா வட்டாட்சியர் வளர்மதி ஆகியோர் தங்களின் உயர் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர் சரயு ஐஏஎஸ், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்காமல் மாமூலாக இருந்து விட்டதாக கூறப்படுகிறது.
அழுகிய முட்டை, நாய்கள் இன்னும் சில துர்நாற்றம் வீசக்கூடிய கழிவுகளை மிகப்பெரிய கொப்பரைகளில் போட்டு, அரைகுறையாக வேகவைத்து அதை மீன் வளர்க்க அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் போட்டு, தடை செய்யப்பட்ட அணை மீன்களை வளர்த்து வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் கள ஆய்வுக்கு வரும்போது தாளமடுவு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மீன்களை வளர்க்கப்படும் இடங்களில் அழைத்துச் சென்று காண்பிக்காமல், மறைத்து விட்டு இதற்காக மாத மாதம் சிலர் மாமூல் பெற்று வருவதாக கூறப்படுகிறது.