இரண்டு கிலோ மீட்டர் தூரம் சேஸ் செய்து கொலை! வேலூரில் பீதி! லேட்டாக வந்த போலீஸ்!
ஜி.குலசேகரன்,
பைக்கை எடுக்க சொன்னவரை இரண்டு கிலோமீட்டர் தூரம் துரத்தி கத்தியால் குத்தி கொலை செய்தனர். தந்தை, மகனின் வெறி செயலால் மக்கள் பீதியடைந்திருக்கிறார்கள்.
வேலூர் அடுத்த சதுப்பேரியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 34). கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (54). இவர் திருமணியில் உள்ள அரசு பள்ளியில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வருகிறார்.
இவரது மகன் சக்தி ( 24). இவர் வேலூரில் உள்ள பிரபல ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கோடீஸ்வரனும்,அவரது மகன் சக்தியும் கஸ்பா, ஆர்.என்.பாளையம் பஜாருக்கு பைக்கில் வந்தனர்.
அப்போது சாலையோரம் உள்ள லோடு ஆட்டோவில் தக்காளி வாங்குவதற்காக தங்களது பைக்கை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி இருந்தனர். அப்போது வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்த பிரேம் குமார் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பைக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார்.
இதனைக் கண்டு கொள்ளாமல் தந்தையும், மகனும் தக்காளி வாங்கிக் கொண்டு இருந்தனர். இதனால் பிரேம்குமார் தொடர்ந்து ஹாரன் அடித்துக் கொண்டு இருந்தார்.தொடர்ந்து ஹாரன் அடித்ததால் எரிச்சலடைந்த தந்தையும்,மகனும் சேர்ந்து பிரேம்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது, பின்பு 2 தரப்பினரும் ஒருவரை, ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது அருகில் இருந்தவர்கள் சண்டையை தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை பிரேம்குமார் சதுப்பேரி பகுதியில் உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார் அப்போது அந்த வழியாக வந்த கோடீஸ்வரன் பிரேம்குமாரை பார்த்ததும் அவரது மகன் சக்தியை வரவைத்தார்.
ஏற்கனவே பிரேம்குமார் மீது ஆத்திரத்தில் இருந்த தந்தையும் மகனும் அவரை கொலை செய்வதற்காக கத்தியுடன் பாய்ந்தனர்.
அவர்களிடமிருந்து மோட்டார் வைக்கில் தப்பி ஓடினார் பிரேம் குமார். இருப்பினும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று தாங்கள் எடுத்து வந்திருந்த கத்தியால் பிரேம்குமார் வயிற்றில் சரமாரியாக குத்தினர்.
இதில் படுகாயம் அடைந்த பிரேம்குமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பிரேம்குமார் இறந்ததை உறுதி செய்த தந்தையும், மகனும் அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றனர்.
அருகில் இருந்தவர்கள் இது குறித்து வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இரண்டு நாட்களாக அங்கு பரபரப்பான நிகழ்வுகள் நடந்துக் கொண்டிருப்பதை அறியாத போலீசார் ஆடி அசைந்து வந்தனர்.

பின்னர் பிரேம்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய தந்தையும் மகனையும் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கட்டிடம் மேஸ்திரி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

admin
