இருவார கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்கள்:- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தகவல்!

இருவார கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்கள்:- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தகவல்!

R.Ramesh,

திருப்பத்தூர் மாவட்டத்தில் (01.02.2024 முதல் 14.02.2024 முடிய)  கோழிக் கழிச்சல் தடுப்பூசி இருவார முகாம்.  திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ்இ.ஆ.ப. தகவல்.

 திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் பெருவாரியான மக்கள் கோழிகளை வளர்த்து அதன் மூலம் ஓரளவு வருமானம் ஈட்டி தங்களது குடும்ப செலவினங்களை மேற்கொண்டு வருகின்றனர். புறக்கடையில் இத்தகைய கோழிகள் ஐம்பத்து ஆறாயிரம் எண்ணிக்கையில் பொதுமக்களால் பராமரிக்கப்பட்டுவருகிறது. இவ்வாறு வளர்க்கப்படும் கோழிகளுக்கு பல்வேறு வகையான நோய் தொற்றுகள் ஏற்படுவது இயல்பு.

  இதில் கோழிக் கழிச்சல் நோய் பாதிப்பால் கிராமமக்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும். கோழிக்கழிச்சல் நோய் அனைத்து வயது கோழிகளையும் தாக்கும் தன்மையுடையது மற்றும் 6 வாரத்திற்குட்பட்ட கோழிக் குஞ்சுகள் அதிக பாதிப்புக்குள்ளாகும்.

   கோழிக்கழிச்சல் நோயின் அறிகுறிகளான கோழிகள் உடல் நலம் குன்றியும் சுறுசுறுப்பின்றியும் உறங்கியபடி இருக்கும். தீவனம் தண்ணீர் உட்கொள்ளாமல் இருக்கும். எச்சம் வெள்ளை நிறத்தில் அதிக துர்நாற்றத்துடன் காணப்படும்,கோழிகளின் இறகுகள் சிலிர்த்து தலைப் பகுதி உடலுடன் சேர்ந்தே இருக்கும்.

   கோழிக்கழிச்சல் நோய் கோழிகளைத் தாக்கும் நோய்களிலேயே மிகவும் கொடுமையானது. இந்நோய் ஏற்படுவதை முன்கூட்டியே தவிர்க்கும் பொருட்டு ஆண்டு தோறும் இருவார கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

 திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக பிப்ரவரி மாதத்தில் இருவார கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் நகரம், கிராமம் மற்றும் குக்கிராமங்களில் நடத்தப்பட்டு  அவ்விடங்களிலுள்ள கோழிகளுக்கு தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

 அதே போல இவ்வாண்டும் 56,000 கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் தடுப்பூசிப் பணி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

   அதன்படி 01.02.2024 முதல் 14.02.2024 முடிய இருவாரகாலங்களுக்கு தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்படவிருக்கிறது. அது சமயம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கிராமங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களுக்கு 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய கோழிகளை கொண்டு சென்று கோழிக்கழிச்சல் தடுப்பூசி போட்டு பயனடையுமாறு என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திருப்பத்தூர் மாவட்டம்.