போலிசாரை மிரட்டிய திருப்பூர் பாஜக வேட்பாளர்! வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலையவிடுவேன் என கை நீட்டி எச்சரித்தவர் மீது வழக்கு பதிவு!

ம.பா.கெஜராஜ்,
வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும்படை குழுவினரிம் பாஜக வேட்பாளர் அவரது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலையவிடுவேன் என அங்கு பணியில் இருந்த போலிசாரை நோக்கி கை நீட்டி எச்சரித்து மிரட்டினார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும்படையினர் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம், கோபி அருகே மாவட்ட எல்லையில், உள்ள கெட்டிச்செவியூர் குறிச்சி பிரிவில் பறக்கும் படை அதிகாரிகள் அந்த வழியே வந்த வாகனங்களை சோதனை செய்து அனுப்பிவைத்தனர்.
பறக்கும்படை அலுவலர் முருகேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி, தலைமை காவலர் மகேந்திரன், காவலர் மெய்யானந்தம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்நிலையில், திருப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் அந்த வழியே காரில் வந்தார். அவரது காரை பறக்கும்படையினர் வாகன சோதனைக்காக நிறுத்தினர். அப்போது காரை ஓரமாக நிறுத்தாமல் சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தியதோடு வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்தார்.
பின்னர் காரை நிறுத்தியதும், சப்-இன்ஸ்பெக்டரிடம், ''உங்கள் பெயர் என்ன?'' என்று ஏ.பி. முருகானந்தம் கேட்டார். அதற்கு சப்-இன்ஸ்பெக்டர், 'புகழேந்தி' என பதில் அளித்தார். ''என்னவாக இருக்கீங்க?'' என்று ஏ.பி. முருகானந்தம் கேட்டுபோது 'எஸ்ஐ' என சப்-இன்ஸ்பெக்டர் பதில் அளித்தார். அந்த நேரத்தில் வேட்பாளரின் காரை மெதுவாக டிரைவர் இயக்கினார். அப்போது, ''என்னை மிரட்டச்சொன்னார்களா?'' என்று ஏ.பி.முருகானந்தம் கேட்டார். இதற்கு பதில் அளித்த சப்-இன்ஸ்பெக்டர், ''நாங்க ஏன் மிரட்டணும்?.செக் பண்ண சொல்லியிருக்காங்க.செக் பண்ணிக்கிட்டிருக்கோம்'' என்று சொன்னார்.
அதையெல்லாம் காதில் வாங்காத முருகானந்தம் ஆவேசப்பட்டார். கார் கதவை திறந்து இறங்க முயன்றார். பின்னர் சப்-இன்ஸ்பெக்டரை நோக்கி கை நீட்டி, ''மரியாதையா பேசுங்க'' என்று ஏ.பி. முருகானந்தம் கத்தினார்.
அப்போது கண்காணிப்பு நிலைக்குழுவை சேர்ந்த அலுவலர் முருகேசன், ''நாங்க மரியாதையாகத்தான் பேசுகிறோம்'' என்றார். உடனே அவரிடம் பாய்ந்த ஏ.பி. முருகானந்தம், ''நீங்க யாரு?'' என்று கேட்டார். பின்னர் அவரிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு மிரட்டினார். அதிகாரி முருகேசனும், தனது அடையாள அட்டையை காண்பித்தார். அதை கழுத்தில் போடுங்க என்று ஏ.பி.முருகானந்தம் அதிகாரமாக சொன்னார்.
''மரியாதையா பேசி பழகனும். புரிஞ்சுதுங்களா. வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன்'' என ஏ.பி. முருகானந்தம் மிரட்டினார். இதைக்கேட்டதும் அங்கு நின்ற தலைமை காவலர், ''சார் நாங்க அங்கிருந்தே ஸ்லோ பண்ணி லெப்ட்ல ஒதுங்கி வருமாறுதானே கூறினோம்'' என்றார்.
உடனே ஏ.பி. முருகானந்தம், ''என்ன என்ன சவுண்டு விடுறியா மரியாதையா பேசுங்க. நான் இவரிடம்தான் பேசிக்கிட்டிருக்கிறேன். உங்ககிட்ட நா பேசல. மரியாதையா முதல்ல பேசுங்கன்னு சொல்றேன். அதோடு நிறுத்திக்கோங்க'' என்று ஆத்திரப்பட்டார்.
உடனே அந்த காவலர், ''நான் வாங்க போங்கன்னுதான் பேசுனேன் சார்'' என்றார். உடனே ஏ.பி. முருகானந்தம், ''உங்க கிட்ட நான் பேசுனேனா? நான் இவருகிட்டதான பேசிக்கிட்டு இருக்கேன்'' என்று ஆவேசப்பட்டு கார் கதவை திரந்து இறங்க முயன்றார். அதற்கு அந்த காவலர் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், ''சார் டிராபிக் ஆவுது'' என்று கூறினார்.
இருந்த போதும் ஏ.பி. முருகானந்தம், ''நான் இவருகிட்டதான பேசிக்கிட்டிருக்கேன் நான் இவருகிட்டதான பேசிக்கிட்டிருக்கேன்'' என்று கூறி அடிப்பதை போல செயலில் ஈடுபட்டார்.
இருந்த போதும், ஏ.பி. முருகானந்தத்தின் வாகனத்தை சோதனை செய்து அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
தேர்தல் காலத்தில் அமலில் உள்ள விதிமுறைகளின்படி பணிபுரியும் பறக்கும் படையினர் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கிறது.
பறக்கும் படையினரை மிரட்டிய பாஜக வேட்பாளர் முருகானந்தம் மீது இதச. 341, 506(i) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.