பள்ளி கழிவறை சுவர் இடிந்து மூன்று மாணவர்கள் பலி! தலா பத்து லட்சம் அறிவித்த முதல்வர்!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,
பள்ளிக்கூட கழிவறையின் சுவர் இடிந்து விழுந்ததில், மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு தலா பத்து லட்சம் நிதி அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலியில் டவுன் செல்லும் சாலையில் உள்ள ஷாப்ஃடர் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 10.50 மணி அளவில் இடைவேளை விடப்பட்ட நேரத்தில் மாணவர்கள் கழிப்பறை சென்றுள்ளனர். அப்போது பள்ளி கட்டிடத்தின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்துள்ளது.
இதில் மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நூறு ஆண்டுகள் பழமையான இந்த பள்ளியின் சுவர் ஏற்கனவே இடிந்து விழும் நிலையில் தான் இருந்துள்ளது.
ஆனால் அதை நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில் மேற்படி பள்ளி மாணவர்கள், கற்களை கொண்டு எறிந்தும் பள்ளியில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியும் அவர்களது கோபத்தை வெளிப்படுத்தினர். நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் விபத்து நடந்த பள்ளியை நேரில் பார்வையிட்டார்.
இந்த விபத்தில் மாணவர்கள் அன்பழகன், விஸ்வரஞ்சன் சஞ்சய் என்ற மூவர் உயிரிழந்து உள்ளனர்.
பள்ளி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் 7 மாணவர்கள் காயமடைந்து அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த பள்ளிக்கூடத்தில் ஆய்வு செய்த மாநகர காவல்துறை ஆணையாளர் செந்தாமரைக் கண்ணன் பின்செய்தியாளர்களிடம் பேசியபோது, "தற்போது பள்ளியில் நடந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை இருப்பினும், தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதனிடையே நெல்லையில் தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறை கட்டிடம் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர் என நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்துப் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி கட்டடங்களின் உறுதித் தன்மையையும் ஆய்வு செய்ய உள்ளோம்.
கடந்த மாதம் நடைபெற்ற முதன்மை கல்வி மாவட்ட அலுவலர்கள் கூட்டத்தில், சேதமடைந்துள்ள பள்ளி கட்டடங்களில் குழந்தைகளை அனுமதிக்கூடாது என்று கண்டிப்பாக கூறியுள்ளோம்.
அதன்படிதான் செயல்பட்டு வருகின்றார்கள்.இன்று நடைபெற்ற சம்பவம் துரதிஷ்டவசமானது. இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். முதலமைச்சரின் அறிவுறுத்தல்படி நிவாரணம் வழங்கப்படும் என்றார்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இறந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் பள்ளியின் கழிவறைச் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து துடித்துப் போனதாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
துயர சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதோடு உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா பத்து லட்சம் ரூபாயும், காயமுற்ற நான்கு மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.