அந்த ஏழு ஏக்கர்? முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மிரட்டுவதாக அதிமுக பிரமுகர் புகார்! இல்லை என மறுப்பு!

ஜே.தேவபிரகாசம்,
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தன்னை மிரட்டுவதாக அதே கட்சியைச் சேர்ந்த¢ ரிஷிகுமார் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் வீரமணி.
அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
"வேலூர் புதிய பஸ்நிலையம் பார்க்கிங் நடத்தி வருகிறேன். இந்த இடம் ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் பிரம்மானந்தா தாண்டா மற்றும் சேகர் ரெட்டி ஆகிய இருவருக்கும் சொந்தமானது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி என்னை செல்போனில் தொடர்பு கொண்டு பார்க்கிங் இடத்தை மாலை 6 மணிக்குள் காலி செய்ய வேண்டும் என்று மிரட்டினார்.
நான் சேகர்ரெட்டி மற்றும் பிரம்மானந்தா தாண்டா ஆகிய இருவரும் அறிவுறுத்தி தான் நான் இந்த பார்க்கிங் நடத்தி வருகிறேன். ஆனால் தற்போது திடீரென முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி என்னை மிரட்டி வருகிறார். எனவே உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
காட்பாடி காந்தி நகரை சேர்ந்த சேகர் ரெட்டி பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபராகவும் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் ராணுவ வீரரும் சேகர் ரெட்டியின் தந்தையார் மறைவிற்கு அஞ்சலி செலுத்த எடப்பாடி மற்றும் பல்வேறு அதிமுக முன்னாள் அமைச்சர்களுடன் வந்து அஞ்சலி செலுத்தினர், இதை முன்னின்று கவனித்தவா ¢தான் கே.சி. வீரமணி.
இந்நிலையில் தான் அவர்மீது ரிஷிகுமார் புகார் மனுவை எஸ்.பி மதிவாணனிடம் கொடுத்துள்ளார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட எஸ்பி இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில் ரிஷிகுமார் கூறுகையில் "வேலூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் சுமார் 7 ஏக்கர் அளவுள்ள நிலத்தை பிரம்மானந்தாவும், சேகர் ரெட்டிக்கு சேர்ந்து வாங்கினார்கள். அவர்கள் சொன்னதன் பேரில் கடந்த 5 வருடங்களாக அங்கு பார்க்கிங் பாயின்ட் நடத்தி வருகிறேன்.
அந்த இடத்தில் இருந்து என்னை காலி செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மிரட்டினார். இதுகுறித்து, அண்ணனிடம் (சேகர் ரெட்டி) பேசியபிறகே, இந்த புகாரை நான் தருகிறேன். இந்த இடத்துக்கும் கே.சி.வீரமணிக்கும் எந்த தொடர்பும் இல்லை. கடந்த 5 வருடங்களாக அந்த இடத்தை நான்தான் பராமரித்து வருகிறேன்" என்றார்.
இது குறித்து முன்னாள் அமைச்சர் வீரமணியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது நான் யாரையும் மிரட்டவில்லை. என்னுடைய நண்பர் பிரம்மனந்தாவும், சேகர் ரெட்டியும் சேர்ந்து 7 ஏக்கர் நிலத்தை வாங்கினார்கள். இதில், 70% பிரம்மானந்தாவுக்கும், 30% சேகர் ரெட்டிக்கும் சொந்தமானது. ரிஷிகுமார் என்னுடைய கட்சிக்காரர்தான்.
இப்போது அந்த இடத்தை மொத்தமாக அபகரிக்க சேகர் ரெட்டி ஏதோ பிளான் போடுகிறார் என்று நினைக்கிறேன். அந்த இடம் தொடர்பாக என்னுடைய வீட்டில் பிரம்மானந்தா நேற்று பேசிக் கொண்டிருந்தார். "என்னுடைய செல்போனில் இருந்து ரிஷிகுமாருக்கு தொடர்புகொண்டு பிரம்மானந்தாவுடன் பேசுங்கள்" என்று சொன்னேன்.
அந்த இடத்தை காலி செய்து கொடுக்கும்படி அவர்தான் ரிஷிகுமாரிடம் பேசினார். இந்த விஷயத்தை சேகர் ரெட்டியிடம் ரிஷிகுமார் எப்படி சொன்னார் என்று தெரியாது.
ஆனால், அவர் கூறியதாகக் கூறி என்மீது புகார் கொடுத்துள்ளார்.
என்னுடைய செல்போனில் இருந்து அவரை தொடர்புகொண்டது மட்டுமே உண்மை. ஆனால், நான் மிரட்டவில்லை, மிரட்டியதாக ரெக்கார்டு இருந்தால் தரட்டும். ரிஷி குமார் கட்சி தொடர்பாக என்னுடன் அடிக்கடி பேசுபவர்.. ஆனால் எதற்காக இந்த மாதிரியான புகார் ஒன்றை தெரிவிக்கிறார் என்று தெரியவில்லை என்று புகார் குறித்து மறுத்து பேசினார்.
அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த வீரமணி பல்வேறு இடங்களை ஆக்கிரமிப்பு செய்து கல்லூரி மற்றும் சொகுசு பங்களாக்களையும் மிகப்பெரிய லாட்ஜ்களையும் கட்டி வருகிறார் என்கின்ற பல்வேறு புகார் கூறப்பட்டது.
அதேபோல் வேலூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள சாய் சிட்டி என சொல்லப்பட்ட இடத்திலும் இவருடைய தலையீடு இருந்தது. அதில் ரியல் எஸ்டேட் அதிபரான ராமமூர்த்தி ரெட்டி என்பவரிடமிருந்து இந்த இடத்தை அடாவடியாக வாங்கி சேகர் ரெட்டி இடமும் அவர் நண்பரிடமும் ஒப்படைத்தது வீரமணி தான் என்றும் கூறப்படுகிறது.,
இந்த நிலையில் தான் சேகர் ரெட்டியின் நண்பரும் அந்த பார்க்கின் இடத்தின் பார்ட்னருமான பிரம்மானந்தா தான்டாவிற்கு மட்டும் இந்த இடத்தை வாங்கித் தருவதற்காக வீரமணி முயற்சிக்கிறார் என்கின்ற குற்ற சாட்டும் கூறப்படுகிறது.