தெக்குபட்டு ஊராட்சி செயலாளர் சஸ்பெண்டு! ஓய்வூதியதாரர்கள் என்னிடம் நேரில் குறைகளை சொல்லலாம்! திருப்பத்தூர் ஆட்சியர் அதிரடி!

ஆர்.ரமேஷ்,
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ஓய்வு ஊதியர்களுக்கான குறைத்தீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பணிபுரிந்து, ஓய்வுப்பெற்றோர்களின் ஓய்வு ஊதியதாரர்களின் குறைகளை தீர்க்கும் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை குறைத்தீர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில் ஓய்வு ஊதியதாரர்களின் நிலுவையினங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலை நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டதற்கான நிலுவைத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை, பணிகாலத்து நிலுவைத்தொகை பெறப்படவில்லை, சில பணியாளர்களின் பணிகாலத்தில் உள்ள குறைபாடுகள், சென்னை தலைமையிடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
தலைமையிடத்தில் இருந்து அதற்கான மறு அறிக்கை கோரப்பட்டுள்ளது. அதனை உடனடியாக விளக்கத்துடன் தலைமையிடத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
மேலும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்தபோது பணிபுரிந்து ஓய்வுபெற்றோர்களின் ஆவணங்கள் வேலூர் மாவட்டத்திலேயே இருக்கின்றன. அந்த ஆவணங்களை திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மாற்றம் பெற்று, எங்களது சேவைகளை தீர்வுக்காணப்பட வேண்டும் எனவும் இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஓய்வு ஊதியதாரர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனை கேட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் உங்களின் கோரிக்கைகள் தீர்க்காணுவதற்கான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும். மேலும் இதுபோன்று கோரிக்கைகள் ஏதும் இருக்குமாயின், நிவர்த்தி செய்ய இயலாத நிலை இருந்தால் என்னை நீங்கள் அலுவலக நேரங்களில் நேரடியாக சந்தித்து தகவலை தெரிவிக்கலாம், இதற்காக காத்திருக்க தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்த செயல்பாட்டினை ஓய்வு ஊதியதாரர்கள் வரவேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), ஓய்வுப்பெற்ற அலுவலர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
ஊராட்சி செயலாளர் சஸ்பெண்டு
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வாயிலாக பல்வேறு ஊராட்சிகளில் அரசு திட்டங்கள் செயல்பாடுகள் குறித்தும், தற்போதைய நிலை குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (05.07.2024) வருடாந்திர தனிக்கை பணியினை மேற்கொண்டார்.
இந்த ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்று வரும் அரசின் திட்ட பணிகள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலரிடம் பணிகளின் தற்போதுள்ள நிலை குறித்து, ஆவணங்கள் தெரிவித்துள்ள கால நிர்ணயத்தின் அடிப்படையில் பணிகளை முடிக்கப்படாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் இப்பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டு, ஒப்பந்தாரர்களிடமும் காலதாமத்திற்கான விளக்கத்தினை பெற்று துறைசார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து வருடாந்திர ஆய்வு மேற்கொள்ளும் பொழுது, இதில் நாட்றம்பள்ளி ஒன்றித்திற்குட்பட்ட தெக்குப்பட்டு ஊராட்சி செயலாளர் வளர்ச்சி திட்டப்பணிகளில் எதிலும் கவனம் செலுத்தாமல் மெத்தனமாக செயல்பட்ட காரணத்திற்காக ஊராட்சி செயலரை பணியிடை நீக்கம் செய்ய சம்மந்தப்பட்ட அலுவலருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டாக்டர்.உமாமகேஸ்வரி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), உதவி செயற்பொறியாளர் மற்றும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உள்ளனர்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்