கருத்து கணிப்பு பொய்.... அது உண்மையானால் நான் மொட்டையடித்துக் கொள்வேன்!

கருத்து கணிப்பு பொய்.... அது உண்மையானால் நான் மொட்டையடித்துக் கொள்வேன்!

 நரேஷ்.என்,

   இந்தியாவில் உள்ள 543  மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 1 ஆம் தேதிவரை மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.

 அதில்  7-ஆம் கட்ட தேர்தல் 1 ஆம் தேதி நடைபெற்றது. அன்று மாலை 6.30 மணிக்கு தேசிய ஊடகங்கள் அனைத்தும் பாஜகவுக்கே வெற்றி என்று கூட்டாக அலறியது. வாக்களிக்க வரிசையில் நின்றவர்களுக்கு பல பூத்துகளில் டோக்கன் வழங்கப்பட்டு இரவு 9 மணிவரைக்கூட அவர்கள் ஓட்டு போட்டுக் கொண்டிருந்தார்கல். அதையெல்லாம் இந்த கருத்துக்கணிப்பு கூட்டங்கள் மதிக்கவேயில்லை.

  அதே வேளையில் அன்று இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம்  காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகாஜின கார்கே வீட்டில் நடைபெற்றது.

 இந்தியா கூட்டணி 295 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

 ஆனால் இந்த செய்தி அவ்வளுவாக எடுபடவில்லை. எக்ஸிட் போல் என்கிற பெயரில் வெளியான கூப்பாடுகளே இதற்கு காரணம்.

 ஆனால் உத்தர பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கடந்த தேர்தலைவிட அதிக இடங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைக்கும் என்று பாஜக தலைவர் நட்டா தெரிவித்துள்ளார்.

 "அவர்கள் எங்கள் சாதனையையும் அணுகுமுறையையும் பார்த்திருக்கிறார்கள். எங்களின் பணி ஏழைகள், விளிம்புநிலை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வில் சிறப்பான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது," என்று கூறியிருந்தார்.

 ஆனால் "இது மோதி மீடியாக்களின் கருத்துக்கணிப்பு" என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருக்கிறார். 

மேலும் அவர் "இதன் பெயர் கருத்துக் கணிப்பு அல்ல, இது மோதி மீடியாக்களின் கருத்துக் கணிப்பு, இது மோதிஜியின் கருத்துக் கணிப்பு, அவரது கற்பனைக் கருத்துக்கணிப்பு".  இந்தியா கூட்டணி 295 இடங்களைப் பெறும் என்றுசொன்னார்.

 பாஜக வென்றால் நான் மொட்டை அடித்துக் கொள்வேன்- ஆம் ஆத்மி எம்எல்ஏ!

ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏவும், புது டெல்லி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான சோம்நாத் பார்தி, தனது எக்ஸ் பக்கத்தில், "மூன்றாவது முறையாக நரேந்திர மோதி பிரதமரானால் மொட்டை அடித்துக் கொள்வேன்" என்று கருத்துக் கணிப்புகள் வெளியான பிறகு தெரிவித்துள்ளார்.

மேலும், "என் வார்த்தைகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். ஜூன் 4ஆம் தேதி அனைத்து கருத்துக் கணிப்புகளும் தவறு என நிரூபிக்கப்படும், மோதி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக மாட்டார்" என்று கூறினார்.

டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்றும் பார்தி கூறியுள்ளார்.

"பிரதமர் நரேந்திர மோதிக்கு பயந்துதான், கருத்துக் கணிப்புகள் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன. எனவே ஜூன் 4ஆம் தேதி உண்மையான முடிவுகள் வரும் வரை நாம் அனைவரும் காத்திருக்க வேண்டும்" என்று கூறினார் பார்தி.

 ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், தனது எக்ஸ் பக்கத்தில், "நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோதி மிரட்டல் தொனியில் பேசிய விதம், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளிலும் வெளிப்படுகிறது. அந்த அச்சத்தில்தான் சேனல்கள் இவ்வாறு செய்துள்ளன. 2004ஆம் ஆண்டு போலவே இந்த கருத்துக் கணிப்புகளும் உள்ளன" என்றார்.

  இதுகுறித்து எக்ஸ் பக்கத்தல் பதிவிட்டிருந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "இந்த கருத்துக்கணிப்பின் காலவரிசையைப் புரிந்து கொள்ளுங்கள், பாஜகவுக்கு 300 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என பாஜக ஊடகங்கள் சொல்வார்கள் என்று எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே கூறியிருந்தன. இதனால் வாக்கு எண்ணிக்கையில் மோசடி செய்வதற்கான வாய்ப்பு உள்ளது," என்று கூறியிருந்தார்.

   பல மாதங்களுக்கு முன்பே இந்த கருத்துக் கணிப்புகள் தயாரிக்கப்பட்டதாகவும், ஆனால் சேனல்கள் இப்போது அவற்றை வெளியிட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

  மேலும், "கருத்துக்கணிப்பின் அடிப்படை மக்கள் கருத்துதான், வாக்குப்பதிவு இயந்திரம் அல்ல. மக்கள் சக்தியைவிட பெரிய சக்தி எதுவும் இல்லை என்பதை இவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்," என்று அகிலேஷ் யாதவ் கூறியிருக்கிறார்.

  தேர்தலுக்குப் பிறகு வெளியான கருத்துக் கணிப்புகளைப் பற்றி, ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில், "முன்னர் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு 'ஆக்சிஸ் மை இந்தியா' அமைப்பு 160 இடங்கள் கிடைக்கும் எனக் கூறியது நினைவில் இருக்கலாம். ஆனால் இறுதியில் 77 இடங்கள் மட்டுமே கிடைத்தது.

   இப்போது 400 என்கிறார்கள். ஆனால் 200 தான் கிடைக்கும். கடைசி வாக்கை எண்ணி முடிக்கும்வரை அதில் மட்டுமே கவனம் செலுத்துமாறு கட்சிகளிடம் கோரிக்கை வைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

   உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியபோது, பாஜகவின் '400 தொகுதிகள்' என்ற கதைக்கு ஆதரவாக வெளியாகியுள்ள இந்தக் கருத்துக்கணிப்புக்குப் பின்னால் ஒரு உள்நோக்கம் உள்ளது.

 பாஜகவுக்கு ஆதரவான அலை இல்லை, மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், மக்கள் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற முன்வந்துள்ளார்கள்," என்று கூறினார்.

மேலும், "பாஜகவும், பிரதமர் நரேந்திர மோதியும் உருவாக்கிய '400 தொகுதிகள்' கதையை நடைமுறைபடுத்த, அது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். கருத்துக் கணிப்புகள் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்துவதாக மக்கள் உணர வேண்டும். எனவே இதில் ஏதோ சதி இருக்கிறது. அதனால்தான் இந்த கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன," என்று கூறினார் ஹரிஷ் ராவத்.

செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா (யுபிடி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் , "தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் எல்லாம் வெறும் கார்ப்பரேட் விளையாட்டு. நீங்கள் அவர்களுக்குப் பணம் கொடுங்கள், அவர்கள் உங்களுக்குச் சாதகமாகப் புள்ளிவிவரங்களை வெளியிடுவார்கள். இந்தியா கூட்டணி 295 முதல் 310 இடங்கள் வரை பெற்று ஆட்சி அமைக்கும்" என்று கூறினார்.