பெண்ணை வசை பாடிய போலீஸ் அதிகாரி! போதை ஆசாமியை காப்பாற்றியதற்கு கேள்வி கேட்க கூடாதா?

பெண்ணை வசை பாடிய போலீஸ் அதிகாரி! போதை ஆசாமியை காப்பாற்றியதற்கு கேள்வி கேட்க கூடாதா?

ஜி.கே.சேகரன்,

கஞ்சா போதையில் பெண்களிடம் அடாவடி செய்தவனை போலீசில் பிடித்துக் கொடுத்தும் அவன் போதையில் இருப்பதால் சிறைக்கு அனுப்ப முடியாது என்று வெளியே அவிழ்த்து விட்டிருக்கின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கேள்வி எழுப்பிய நிலையில் அவரை போலீஸ் அதிகாரிகள் சகட்டுமேனிக்கு திட்டி தீர்த்து இருக்கிறார்கள்.

வாணியம்பாடியில் கணவனை இழந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமியை பொதுமக்கள் போலீஸிடம் பிடித்துக் கொடுத்தனர். 

ஆனாலும் அவர்கள் வழக்கம் போல நடவடிக்கை எடுக்காததால் மக்கள் அச்சம் அடைந்து இருக்கிறார்கள். 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர்  அஜித். இவர் ஏற்கனவே அப்பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து வந்துள்ளார், 

இந்நிலையில் அப்பகுதி பெண்களிடையே அஜீத் இரவு நேரங்களில்  மது போதையில் பிரச்சினையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

 அப்படி இருக்க, நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்த அஜீத் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணை அடித்து தாக்கி இருக்கிறார். 

லட்சுமி  தொழிற்சாலையில் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய போது அவருக்கு ஒரு போன் அழைப்பு வந்திருக்கிறது. 

அதைக் கண்ட அஜித் யாருக்கு போன் செய்கிறாய் என கேட்டுக் தகராறில் ஈடுபட்டு கீழே தள்ளி அவரின் முகபகுதியில் பலமாக  தாக்கியுள்ளார்.

 இது குறித்து அப்பகுதி மக்கள் வாணியம்பாடி நகர காவல் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணிடம்  பிரச்சினையில்  ஈடுபட்ட அஜித்தை பிடித்து சென்றனர். 

 பின்னர் அவர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிபதியிடம் ஆஜர் படுத்தப்பட்ட போது நீதிபதி இளைஞர் அளவுக்கு அதிகமான மது போதையில்  இருந்ததால் காவல்துறை பிணையில்  அவரை விடுவித்துள்ளார். 

இதனால் ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும்  அப்பகுதி மக்கள் காவல்துறையிடம் பிரச்சினையில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது

 மேலும் புகார் அளித்த பெண்ணையே உதவி ஆய்வாளர் பிரகாசம் மிரட்டுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

 தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு பெண்கள் மற்றும்  பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் இது போன்ற நபர்கள் மீது காவல்துறை மற்றும் நீதிமன்றத்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மணல் கொள்ளை.

வாணியம்பாடி அருகே பாலாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் பொதுமக்கள் வருவதை பார்த்து  ஜல்லடைகளை அங்கேயே வீசிவிட்டு தப்பி தலைமறைவாகினர்.

மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய உபகரணங்களை போலிசார் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேட்டுபாளையம் பாலாற்று மேம்பாலத்தின் கீழ் மர்ம நபர்கள் சிலர் மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து அப்பகுதியை  சேர்ந்த பொதுமக்கள்  சிலர் அங்கு வந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனை தெரிந்து கொண்ட மணல் கடத்தும் கும்பல் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தும் சல்லடை உள்ளிட்டவற்றை அங்கேயே வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் அங்கு வந்த போலிசார் மணல்  கடத்த பயன்படுத்திய சல்லடை மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.

மேலும் மணல் கடத்தும் கும்பல்  குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் பாலாற்று மேம்பாலம் கீழ்புறம்  ஏற்கனவே பழுதடைந்து காணப்படுகிறது.தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருவதால் பாலம் மேலும் பளுதடைய வாய்ப்பு உள்ளதாகவும்,பாலாற்றில் மணல் கொள்ளை நடக்காமல் இருக்க போலிசார் மற்றும் வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

விபத்து,

 தாமலேரிமுத்தூர் பகுதியில் அரசு பேருந்து மோதியதில் வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதி!

திருப்பத்தூர் மாவட்டம் தாமலேரிமுத்தூர் பகுதியைச் சேர்ந்த மோகன் மகன் ஹேமநாத் வயது (18) இவர் இருசக்கர வாகனத்தில் கட்டேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது திம்மம்பேட்டை பகுதியில் இருந்து திருப்பத்தூருக்கு அரசு பேருந்தை ஓட்டுநர் லோகேஷ் என்பவர் ஓட்டி வந்தார்.

 அப்போது தாமலேரிமுத்தூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ஹேமநாத் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதியதில் கை மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 மேலும் இவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனைக் கண்டு உறவினர்கள் கத்தி கதறி அழுதனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு பேருந்து மோதி உயிருக்கு ஆபத்தான நிலையில் வாலிபர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.