பி.இ.மாணவரை கடத்தி அடைத்து வைத்த எஸ்.ஐ:- 25- ஆயிரம் பாக்கிக்காக இரண்டரை லட்சம் எழுதி வாங்கிய ரைட்டர்!

பி.இ.மாணவரை கடத்தி அடைத்து வைத்த எஸ்.ஐ:- 25- ஆயிரம் பாக்கிக்காக இரண்டரை லட்சம் எழுதி வாங்கிய ரைட்டர்!
: :

ம.பா.கெஜராஜ்,

 பி.இ.படித்துக் கொண்டிருக்கும் மாணவரை கடத்தி அடைத்து வைத்த எஸ்.ஐ., அதற்கு உடந்தையாக இருந்த போலிசார் மற்றும் 25- ஆயிரம் பாக்கிக்காக இரண்டரை லட்சம் எழுதி வாங்கிய ரைட்டர் ஆகியோர் மீது பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து காவல் உயரதிகாரிகளுக்கும் புகார் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம்,பள்ளிப்பட்டு தாலுக்கா,பெருமாநெல்லூர் கிராமம், விஜயராகவ சாமி தெருவைச் சேர்ந்தவர்,ஹரிகிருஷ்ணன், இவரது தந்தையின் பெயர் ஆறுமுகம், இவர் நெல் வ் ஆங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அரிகிருஷ்ணன் இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

 அந்த புகாரில் கூறப்பட்டிருப்பத்தாவது,

   நான் சென்னையை அடுத்த பூந்தமல்லியிலுள்ள பணிமலர் பொறியியல் கல்லூரியில் இறுதியியாண்டு பி.இ. படித்து வருகிறேன். என் தகப்பனார்,நெல் வாங்கி விற்கும் தொழில் செய்கிறார். சோளிங்கர் அடுத்த ஜோதிபுரத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவரிடம் என் தந்தை நெல் வாங்கிய வகையில் ரூ.25,000/-பாக்கி வைத்துள்ளார். ஆகவே பலமுறை என் தகப்பனாரிடம் நடராஜன் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். என் தகப்பனாரும் பணம் கிடைத்தவுடன் கொடுத்துவிடுவதாக கூறினார்.

 நான் கடந்த 04.05.2022 ஆம் தேதி விடியற்காலை சுமார் 4.45 மணிக்கு மேற்சொன்ன வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தேன். அப்போது போலிஸ் சீறுடையில் இரண்டு போலிசாரும், அவர்களுடன் நடராஜன், அவருடைய மகன் பாலா மற்றும் நடராஜனின் இன்னொறு மகன் பெயர் தெரியவில்லை அடையாளம் தெரியும், ஆகிய ஐவரும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து என்னிடம் ஐந்து நபர்களும் எங்கடா அந்த ஆறுமுகம் என்று கேட்டு மிரட்டினார்கள். (இரண்டு போலிஸ்காரர்களில் ஒருவர் குண்டாகவும் கறுமை நிறமாகவும் இருந்தார். மற்றொறுவர் வலது கையில் ஒரு விரலில் மாவுகட்டு போட்டிருந்தார்).

 நான் அவர் வெளியூர் சென்றிருக்கிறார் என்றதற்கு, அவன் கொடுக்க வேண்டிய பாக்கி பணத்தை இப்போதே கொடுக்க வேண்டுமென்று கூறி பீரோவை திறக்கச் சொல்லி ஐவரும் மிரட்டினார்கள், இந்த மிரட்டல் சத்தத்தைக் கேட்டு என் அம்மாவும், என் தங்கையும் எழுந்து வந்தார்கள்.

  நான் பயந்து போய் பீரோவை திறக்க மாட்டேன் என்றதற்கு, அவர்களே எங்கள் வீட்டு பீரோவை திறந்து பணம் இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்தனர்.

  பணம் ஏதும் இல்லாததால், என்னை வலுகட்டாயமாக இழுத்து நடராஜனுக்கு சொந்தமான சிகப்பு நிற மாருதி ஷிப்ட் காரில் பின்னிருக்கையின் நடுவில் அமரவைத்து எனக்கு வலது மற்றும் இடதுபுறம் இரண்டு போலிசார் அமர்ந்துக் கொண்டு, முன் இருக்கையில் நடராஜன் அமர்ந்து, காரை நடராஜனின் மகன் பாலா ஓட்டிச்சென்று, சுமார் காலை 6.00 மணிக்கு சோளிங்கர் காவல் நிலையத்திற்குள் என்னை உட்கார வைத்தனர்.

 அப்போது ஸ்டேஷனில் இருந்த உதவி ஆய்வாளர் பசலைராஜ் என்பவரிடம் நடராஜனும், அவரது இரண்டு மகன்களும், இவன் தான் ஆறுமுகத்தின் மகன் என்றும், இவனை ஸ்டேஷனில் வைத்தால் தானாக வந்து ஆறுமுகம் பணம் கொடுத்துவிடுவார் என்றார்கள்.

 உதவி ஆய்வாளர் பசலைராஜூம், கண்டிப்பாக ரூ.25,000/- இன்றே வாங்கிவிடலாம், இல்லையென்றால் பொய் வழக்கு போட்டு ரிமாண்ட் செய்துவிடுகிறேன் என்று சொன்னார். அதற்கு நான் உதவி ஆய்வாளர் பசலைராஜ் அவர்களிடம், சார் என் தகப்பனார் தர வேண்டிய பாக்கி பணத்துக்கு என்னை எதற்காக ஸ்டேஷனுக்கு வலுகட்டாயமாக அழைத்து வந்தார்கள் என்று கேட்டதற்கு, என் செல் போனை உதவி ஆய்வாளர் பசலைராஜ் பிடுங்கி வைத்துக் கொண்டு, அதில் என் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை ஆராய்ந்து பார்த்தார்.

 மேலும், என் போனிலிருந்து என் தகப்பனாருக்கு பசலைராஜ் அவர்கள் போன் செய்து நடராஜனுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு என்னை அழைத்துச் செல்லும்படியும், அவ்வாறு கொடுக்கவில்லையென்றால் என்னை ரிமாண்ட் செய்துவிடுவதாக மிரட்டினார்.

  பின்பு என்னை சுமார் காலை 8.30 மணிக்கு உதவி ஆய்வாளர் பசலைராஜ் அவர்கள் ஸ்டேஷனிலிருந்து டி.வி.எஸ். அப்பாச்சி கறுப்பு நிற வண்டியில் என்னை அழைத்துக் கொண்டு சோளிங்கரிலுள்ள போலிஸ் குடியிருப்புக்குச் சென்றார். அங்கு ஒரு குடியிருப்புக்கு என்னை அழைத்துச் சென்று அங்கிருந்த ஒரு போலிஸிடம் என்னை ஒப்படைத்துவிட்டு சென்று விட்டார்.

   மதியம் சுமார் 2.30 மணிக்கு நடராஜன், அவருடைய மகன்கள் போலிஸ் குடியிருப்புக்கு காரில் வந்து என்னை அதே காரில் ஏற்றிக் கொண்டு சோளிங்கர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தார்கள்.

  அங்கிருந்த ரைட்டர், என் தகப்பனார் நடராஜனுக்கு ரூ.2,50,000/- பாக்கி என்றும், அந்த பணத்தை இரண்டு நாட்களில் நான் அடைத்துவிடுவதாக எழுதிய பேப்பரில் என்னை கட்டாயப்படுத்தி கையெழுத்து போடச் சொன்னார். நான் முடியாது என்றதற்கு கையெழுத்து போடவில்லையென்றால் உதவி ஆய்வாளர் பசலைராஜ் என்னை ரிமாண்ட் செய்துவிடும்படி கூறியதாக ரைட்டர் மிரட்டினார்.      நான் ரிமாண்ட் செய்யப்பட்டால் என்னுடைய கல்வியும், எதிர்காலமும் பாதிக்கும் என்பதால் வேறு வழியின்றி ரைட்டர் எழுதிய பேப்பரில் கையெழுத்து போட்டேன். கையெழுத்து போட்ட பிறகு என்னுடைய செல்போனை ரைட்டர் ஒப்படைத்தார். பின்னர் என்னை மாலை சோளிங்கர் காவல் நிலையத்திலிருந்து அழைத்து வந்து வெளியே நின்றிருந்த நடராஜனின் காரிலேயே நடராஜன், அவரது இரு மகன்கள்  மற்றும் போலிசார், காரில் என்னை ஏற்றிச்சென்று என் வீட்டில் மாலை சுமார் 6.00 மணிக்கு இறக்கி விட்டு, செல்போனில் என்னை படம் பிடித்தனர்.

 இந்த சம்பவம் குறித்து ஏதேனும் புகார் செய்தால் உன்னை பொய் வழக்கில் ரிமாண்ட் செய்துவிடுவதாக அனைவரும் மிரட்டினார்கள். அப்போது என்னைப் பார்த்ததும் என்னுடைய அம்மா அழுதுக் கொண்டே தான் பயந்து போய் பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் என்னை ஐந்து நபர்கள் கடத்திவிட்டதாக புகார் தெரிவித்த விஷயத்தை என்னிடம் சென்னார்.

  பிறக்கு நான் என் செல்போனை ஆராயந்த போது, என் செல்போனிலிருந்து பசலைராஜ் அவர்கள் எனது தகப்பனாருக்கு பலமுறை கால் செய்து பேசியது தெரிய வந்தது. மேலும் கால் ரெக்கார்டிங்கை ஆராய்ந்த போது அதில் என் தகப்பனாரிடம் பசலைராஜ் அவர்கள் பேசிய ஒரு ஆடியோவை தவிர மற்றவை அழிக்கப்பட்டிருந்தது. அந்த கால் ரெக்கார்டிங்கை கேட்ட போது உதவி ஆய்வாளர் பசலைராஜ் என் தகப்பனாரிடம் பணம் கேட்டதும், பணம் தரவில்லை என்றால் என்னை ரிமாண்ட் செய்துவிடுவதாக மிரட்டுவதும் அதில் பதிவாகியிருந்தது, இந்த உரையாடலின் ரெக்காடிங்கை தங்கள் விசாரணையின் போது தங்களிடம் கண்டிப்பாக ஒப்படைக்கிறேன்.

 சோளிங்கர் காவல் நிலையத்தின் சிசிடிவி கேமிராக்களின் பதிவுகளையும், காவல் நிலையத்துக்கு வெளியே சாலையில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராக்களின் பதிவுகளைப் பார்த்தாலும், என்னுடைய செல்போன், மற்றும் புகாரில் தெரிவித்துள்ள உதவி ஆய்வாளர், இரண்டு போலிசார், நடராஜன் மற்றும் அவரது இரண்டு மகன்கள் ஆகியோரின் செல்போன் அழைப்புக்கள் மற்றும் டவர் லொகேஷன்களை ஆராய்ந்து பார்க்கும் பட்சத்தில் நான் புகாரில் தெரிவித்துள்ள அனைத்து சங்கதிகளும் உண்மையென தெரியவரும்.

 ஆகவே உதவி ஆய்வாளர் பசலைராஜ், இரண்டு போலிஸ்காரர்கள், நடராஜன், அவரது இரண்டு மகன்கள் மற்றும் ரைட்டர் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என அந்த புகார் மனுவில் அரிகிருஷ்ணன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.