கலெக்டரை கலாய்த்த நபர்! சவுண்டு விட்டதால் பரபரப்பு!

கலெக்டரை கலாய்த்த நபர்! சவுண்டு விட்டதால் பரபரப்பு!

  ஜி.கே.சேகரன்,

  ஆம்பூர் அருகே அரசு விழாவில் பேசவிடாததால் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரை சம்மந்தப்பட்ட ஊராட்சிகுழு உறுப்பினரின் கணவர் சவுண்டு விட்டு கலாய்த்தார்.

 அரசு விழாவில் நடந்த இந்த விவகாரத்தினால் பரபரப்பு ஏற்பட்டது. 

 திருப்பத்தூர் மாவட்டம்,ஆம்பூர் அடுத்த அரங்கள் தூர்கம் பகுதியில் உள்ள அரசு மேல் நிலை பள்ளி வளாகத்தில்  மக்கள் மனு நீதி நாள் முகாம் நிகழ்ச்சி  நடைபெற்றது. 

 இந்த விழாவில் சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

 விழா மேடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர் குஷ்வாஹா, இ.ஆ.ப. ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், அரங்கள் துருகம் ஊராட்சி மன்ற தலைவர் பானுமதி, திட்ட அலுவலர் செல்வராசு உட்பட பலருக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

 அதே போல்  மாதனூர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரான சரிதா முத்துக்குமரன் என்பவருக்கு மேடையின் ஓரத்தில் இருக்கை அமைக்கப்பட்டிருந்தது.

 இந்த நிலையில் விழா மேடையில் ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் உட்பட அனைவருக்கும் பேச வாய்ப்பளிக்கபட்ட நிலையில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரான சரிதா முத்துக்குமாருக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை.

  இதனால் ஆத்திரமடைந்த மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரான சரிதாவின் கணவர் முத்துக்குமார்  மேடையிலிருந்து கீழே இறங்க முயன்ற மாவட்ட ஆட்சித் தலைவர் அமர்குஷ்வாகா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆகியோரை பார்த்து சவுண்டு விட்டார்.  ஏன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை. இந்த பள்ளிக்கூடத்துக்கு பத்து லட்சம் ரூபாய் ஒதுக்கியிருக்காங்க. அதைப்பத்தி நாங்க பொதுமக்களுக்கு சொல்ல வேண்டாமா?

  நான் இந்த நாட்டின் குடிமகன், எனக்கு கேள்வி கேட்க உரிமை உள்ளது என ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரை கை நீட்டி கேட்டதுடன், முதல்வரை நேரில் சந்தித்து புகார் கொடுப்பேன் என பேசியதால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

  மேலும் திமுகவினர் இது போன்ற பிரச்சனைகளை பற்றி கேள்வி கேட்பதில்லை என கூறி விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது