அண்ணனுக்காக பாதயாத்திரை நடத்தியவர்.. சொத்துக்காக பிரச்சனை செய்கிறார்! கொதிக்கும் அமைச்சர்!

வி.டி.வித்யாசாகர்,
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் அவரது சகோதரி ஷர்மிலாவுக்கும் இடையே தெலுங்கு தேசம் கட்சி கலகம் மூட்டி பிரச்சனை செய்வதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஆந்திர மாநில வருவாய் துறைஅமைச்சர் சத்யபிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணனுக்காக பாதயாத்திரை நடத்தியவர் சொத்துக்காக பிரச்சனை செய்கிறார் என்று பேட்டியில் சொன்னார்.
ஆந்திர வருவாய் துறை அமைச்சர் சத்யபிரசாத் நேற்ஃஸ்று திருப்பதியில் வெங்கடாஜலத்தை தரிசித்தார். தரிசனத்துக்குப் பின்னர், அமைச்சர் சத்யபிரசாத் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கி இருந்த நமது மாநிலத்தை, முதல்வர் தனது அரசியல் அனுபவம் மூலம் மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த 130 நாட்களும் 130 நிகழ்ச்சிகளை நாங்கள் திறம்பட திட்டம் தீட்டி அமல்படுத்தி வருகிறோம்.
திருமலையில் அரசியல் பேசக்கூடாது என நினைத்தேன். ஆனால், என்னை பேச வைத்து விட்டனர். ஜெகன் வீட்டில் நடக்கும் பிரச்சினைக்கு கூட தெலுங்கு தேசம் கட்சிதான் காரணமா? ஷர்மிளா - ஜெகனின் சொத்து பிரச்சினைக்கு நாங்கள் எப்படி காரணம் ஆக முடியும்?
பொய் என்னும் அஸ்திவாரத்தில் இருந்துதான் ஒய்.எஸ்.ஆர்காங்கிரஸ் கட்சியே உதயமானது. அடுக்கடுக்கான பொய்களை திரும்பத் திரும்ப கூறினால் அது உண்மையாகி விடும் என ஜெகன் நம்புகிறார்.
அண்ணனுக்காக அன்று ஷர்மிளா பாதயாத்திரை நடத்தினார். இப்போது சொத்து பிரச்சினைக்காக ஷர்மிளா பகிரங்கமாக களத்தில் இறங்கி அதே அண்ணனை எதிர்த்து போராடுகிறார்.
இதில் நாங்கள் எங்கே நடுவில் வந்தோம் என தெரியவில்லை. இப்படி எங்கள் மீது வீண் பழி போடுவதை இவர்கள் இருவரும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார்.