கில்லி விளையாட்டின் போது நடந்த கொலை!

உ.சசிகுமார்,
கில்லி விளையாடுவதில் ஏற்பட்ட மோதம் கொலையில் முடிந்தது
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சந்தைதோப்பு பகுதியை சேர்ந்தவர் நாராயணன் மகன் குணசீலன் (வயது 26). சந்தைதோப்பு பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிட்டிப்புல் விளையாட சென்றார். அங்கு ஏராளமானோர் திரண்டு விளையாடிக்கொண்டு இருந்தனர். இதற்கிடையே இந்த கிட்டிப்புல் விளையாட்டில் அதே பகுதியை சேர்ந்த சகோதரர்களான மார்ட்டின்குமார் (23), ஆரோக்கியதாஸ் (27) ஆகியோரும் விளையாடினர்.
அப்போது திடீரென்று குணசீலனுக்கும், மார்ட்டின்குமாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதைப்பார்த்த அருகில் விளையாடிக்கொண்டு இருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி சண்டையை விலக்கி விட்டனர்.
ஆனால் தொடர்ந்து நடந்த வாக்குவாதம் முற்றியதால் ஒருவரையொருவர் கைகளால் தாக்கிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மார்ட்டின்குமார், அவர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குணசீலனை சரமாரியாக குத்தினார்.
இதில் குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே குணசீலன் பரிதாபமாக இறந்தார்.
அவரை கொலை செய்த மார்ட்டின்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும் அவரது சகோதரர் ஆரோக்கியதாசும் தப்ப முயன்றார். ஆனால் அப்பகுதியினர் ஒன்று சேர்ந்து அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு ஆண்டிமடம் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கொலையுண்ட குணசீலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமறைவான மார்ட்டின் குமாரை தேடி வருகிறார்.