'கண்டா வர சொல்லுங்க' யார்தாம்பா இந்த போஸ்டர்களை ஒட்டறது!

'கண்டா வர சொல்லுங்க' யார்தாம்பா இந்த போஸ்டர்களை ஒட்டறது!

க.பாலகுரு,

 தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதியில் தேனியை தவிர பாக்கி 38-ம் திமுக மற்றும் அதன் கூட்டணி வசம் உள்ளது. இந்நிலையில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு தமிழகத்திலுள்ள பல நாடாளுமன்ற தொகுதிகளில் ஒரே மாதிரியான போஸ்ட்டர் ஒட்டப்பட்டு வருகின்றன.

  அந்த வகையில், திருவாரூரில் 'கண்டா வர சொல்லுங்க' எங்க தொகுதி எம்பி எங்கேயும் காணவில்லை என நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜை கண்டித்து போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

  நாகை நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம். செல்வராஜ் பணியாற்றி வருகிறார். மருத்துவ காரணங்களை கூறி சில காலமாகவே தொகுதிக்கு எம்.பி. செல்வராஜ் வராமல் இருந்து வரும் நிலையில் திருவாரூர் கடைவீதி மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளிலும், சுற்றுவட்டார பகுதிகளிலும் 'கண்டா வர சொல்லுங்க'

எங்க தொகுதி எம்பி -ஐ எங்கேயும் காணவில்லை இப்படிக்கு நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி மக்கள் என போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.

  அதே போல் இராணிப்பேட்டை தொகுதியிலும், சிதம்பரம், திருச்சி மற்றும் பல்வேறு பகுதிகளில் இப்படிப்பட்ட வாசகம் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுவருகின்றன.

 இது அரசியல் கட்சிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் இந்த போஸ்டர் ஒட்டப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.