மூதாட்டிகளை குறிவைத்து கொலை!

U.Sasikumar,
மூதாட்டிகளை குறிவைத்து கொலை செய்து கொள்ளையடித்து வந்த கொடூர குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.
இது குறித்து போலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது,
சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி சிவகாமசுந்தரி, கடந்த 22 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது, வழக்கம்போல அவரது மகன் ஸ்ரீராம் உள்ளிட்ட அனைவரும் வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு இரண்டரை லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீராம், தாய் சிவகாமசுந்தரியை எழுப்பச் சென்றபோது இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார், அவர் அணிந்திருந்த 15 சவரன் நகைகள் பறிக்கப்பட்டிருந்தது.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், குடையுடன் வந்த நபர் ஒருவர், வீட்டிற்குள் சென்றது தெரியவந்தது. அந்த நபர் சென்ற வழித்தடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த நபர் திருவல்லிக்கேணிக்கு ஆட்டோவில் சென்றது தெரியவந்தது.
ஆட்டோ பதிவெண்ணை வைத்து ஆட்டோ ஓட்டுநரை பிடித்து விசாரணை செய்து, அவர் இறக்கிவிட்ட இடத்தை கண்டுபிடித்த காவல்துறையினர், கேகே நகரைச் சேர்ந்த சக்திவேல் என்பவரைக் கைது செய்துரவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதில், கட்டிட வேலை செய்துவந்த சக்திவேல், பணம் போதவில்லை என்பதால், கொலை செய்து கொள்ளையடித்ததாக வாக்குமூலம் அளித்தார்.
அதே போல் 2021-ல் கேகே நகரில் வீட்டில் தனியாக இருந்த சீதாலட்சுமி என்ற மூதாட்டியை கொன்று கொள்ளையடித்ததாக வாக்குமூலத்தில் சக்திவேல் கூறியிருக்கிறார்.
கைது செய்யப்பட்டுள்ள சக்திவேலிடம் 60 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.