ஹமாஸ் குழுவின் பயங்கர தலைவர் சின்வார் கொல்லப்பட்டார்! இனி போர் முடிவுக்குவரும் என அமெரிக்கா கருத்து!

ம.பா.கெஜராஜ்,
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் இஸ்ரேல் படையால் கொல்லப்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஜோபைடன்,
"ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் இறந்துவிட்டார். இது இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கும், ஒட்டுமொத்த உலகிற்கும் நல்ல நாள்" என்று தெரிவித்துள்ளார் ஜோ பைடன்.
எக்ஸ் தளத்தில் ஜோ பைடன் வெளியிட்டுள்ள பதிவில், "ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் இறந்துவிட்டார். இது இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கும், ஒட்டுமொத்த உலகிற்கும் நல்ல நாள்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் "காசாவில் நடத்திய தாக்குதலின் மூலம் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக இன்று அதிகாலை இஸ்ரேலிய அதிகாரிகள் எனது தேசிய பாதுகாப்புக் குழுவுக்குத் தெரிவித்தனர். டிஎன்ஏ சோதனைகள் மூலம் தற்போது சின்வார் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகத்துக்கே நல்ல நாள்: இது இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கும், உலகிற்கும் ஒரு நல்ல நாள். ஹமாஸ் என்ற பயங்கரவாதக் குழுவின் தலைவராக இருந்த சின்வார், 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள், பாலஸ்தீனியர்கள், அமெரிக்கர்கள் மற்றும் குடிமக்களின் மரணத்திற்கு காரணமாக இருந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி நடந்த படுகொலைகள், கற்பழிப்புகள் மற்றும் கடத்தல்களுக்கு மூளையாகச் செயல்பட்டார் சின்வார். அவரது உத்தரவின் பேரில் தான் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலை ஆக்கிரமித்து சொல்ல முடியாத காட்டுமிராண்டித்தனத்துடன் - பொதுமக்களையும், குழந்தைகளை அவர்களின் பெற்றோருக்கு முன்பாகவும், பெற்றோரை தங்கள் குழந்தைகளுக்கு முன்பாகவும் கொன்று படுகொலை செய்தனர்.
சின்வார் தான் காரணம்:
அந்த நாளில் 46 அமெரிக்கர்கள் உட்பட 1,200 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் 250க்கும் மேற்பட்டோர் பணயக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். 101 பேரைக் காணவில்லை. காணாமல் போனவர்களில் ஏழு அமெரிக்கர்களும் அடங்குவர், அவர்களில் நான்கு பேர் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், ஹமாஸ் பயங்கரவாதிகளின் பிடியில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. சின்வார் தான் இதற்கெல்லாம் பொறுப்பு.
அக்டோபர் 7 படுகொலைகளுக்குப் பிறகு, காசாவில் பதுங்கியிருக்கும் சின்வார் மற்றும் பிற ஹமாஸ் தலைவர்களைக் கண்டுபிடித்து கண்காணிக்க உதவுவதற்காக இஸ்ரேலிய படையினருடன் இணைந்து செயல்படுமாறு சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் எங்கள் உளவுத்துறை நிபுணர்களுக்கு நான் உத்தரவிட்டேன்.
2011ல் ஒசாமா பின்லேடனைக் கொல்ல அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்ட பிறகு அமெரிக்கா முழுவதும் காணப்பட்ட காட்சிகளைப் போன்றே எனது இஸ்ரேலிய நண்பர்களுக்கு இது நிம்மதியான நாள் என்பதில் சந்தேகமில்லை. ஹமாஸ் படையினரை முற்றிலுமாக அகற்ற இஸ்ரேலுக்கு முழு உரிமையும் உள்ளது.
ஹமாஸால் இனியொரு அக்டோபர் 7 சம்பவத்தை நடத்த முடியாது. நான் விரைவில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் பிற இஸ்ரேலிய தலைவர்களுடன் பேசுவேன். அவர்களை வாழ்த்தி, பணயக்கைதிகளை அவர்களது குடும்பத்தினரிடம் அழைத்து வருவதற்கான வழியைப் பற்றி ஆலோசிப்பேன்.
அப்பாவி மக்களுக்கு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ள இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவேன். தடை தீர்ந்தது: காசாவில் ஹமாஸ் அதிகாரத்தில் இல்லாத ஒரு நாள் வந்துள்ளது. இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை வழங்கும் அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு இப்போது உள்ளது. அந்த இலக்குகள் அனைத்தையும் அடைய யாஹ்யா சின்வார் ஒரு தீர்க்க முடியாத தடையாக இருந்தார். அந்தத் தடை இப்போது இல்லை. இப்போது நிறைய வேலைகள் நம் முன் உள்ளன." என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
Hamas leader Yahya Sinwar is dead.
— President Biden (@POTUS) October 17, 2024
This is a good day for Israel, for the United States, and for the world.
Here’s my full statement. pic.twitter.com/cSe1czhd9s
இஸ்ரேல் பிரதமர்,
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "தீயசக்திகளுக்கு கிடைத்த பலத்த அடி" என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கமலாஹாரிஸ்
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பேசும்போது, "ஹமாஸ் தலைவர் சின்வார் மரணம் அடைந்துள்ளார் என இஸ்ரேல் உறுதி செய்துள்ளது. நீதி வழங்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஒட்டு மொத்த உலகத்திற்கும் நன்மை ஏற்பட்டுள்ளது.
சின்வாரின் கைகளில் அமெரிக்காவின் ரத்தமும் இருந்தது. ஆனால் தற்போது, ஹமாஸ் அமைப்பால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு மனநிம்மதி ஏற்பட்டிருக்கும். கடந்த ஆண்டில், சின்வார் மற்றும் ஹமாஸ் அமைப்பின் பிற தலைவர்களின் இருப்பிடம் பற்றி அறிய, இஸ்ரேல் வீரர்களுடன் இணைந்து, அமெரிக்க சிறப்பு நடவடிக்கை மற்றும் புலனாய்வு அதிகாரிகள் ஈடுபட்டனர். அவர்களுடைய பணியை பாராட்டுகிறேன்.
அமெரிக்கர்களை படுகொலை செய்யும், அச்சுறுத்தும் எந்தவொரு பயங்கரவாதிக்கும் நான் கூறுவது என்னவெனில், நாங்கள் உங்களை நீதியின் முன் நிறுத்துவோம்.
இஸ்ரேல், தன்னை பாதுகாத்து கொள்ள உரிமை உள்ளது.
இஸ்ரேலுக்கு விடுத்த ஹமாஸ் அமைப்பின் மிரட்டல் நீக்கப்பட வேண்டும். அந்த இலக்கை நோக்கி தெளிவான முன்னேற்றம் இன்று ஏற்பட்டுள்ளது. ஹமாஸ் அழிக்கப்பட்டு, அதன் தலைமை நீக்கப்பட்டுள்ளது. இதனால் காசாவில் போர் முடிவுக்கு வருவதற்கான ஒரு வாய்ப்பை இந்த தருணம் நமக்கு ஏற்படுத்தி தந்துள்ளது. போர் நிச்சயம் முடிவுக்கு வரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
கொல்லப்பட்ட யாஹ்யா சின்வார்?
2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு காரணமானவர்களில் ஒருவராக யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் குற்றம்சாட்டி வந்தது.
இவர் காஸா பகுதியின் தெற்கு முனையில் உள்ள கான் யூனிஸ் அகதிகள் முகாமில் பிறந்தார். 62 வயதாகும் யாஹ்யா சின்வார், அபு இப்ராஹிம் என்று பரவலாக அறியப்படுகிறார்.
பாலத்தீனர்கள் 'அல்-நக்பா' (பேரழிவு) என்று அழைக்கும் சம்பவத்திற்குப் பிறகு அவரது குடும்பம் அகதிகளானார்கள்.
சின்வார் முதன்முதலாக 1982 ஆம் ஆண்டு, அவரது 19-வது வயதில் இஸ்ரேலால் கைது செய்யப்பட்டார். பின்னர் மீண்டும் 1985 ஆம் ஆண்டு கைதானார்.
1987ஆம் ஆண்டு ஹமாஸ் நிறுவப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சின்வார் அக்குழுவின் பயங்கரமான உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பான அல்-மஜ்தை நிறுவினார்.
1988 ஆம் ஆண்டு சின்வார் இரண்டு இஸ்ரேலிய வீரர்களைக் கடத்திச் சென்று கொல்ல திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. அதே ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். 12 பாலத்தீனர்களைக் கொன்றதற்காக இஸ்ரேலால் தண்டிக்கப்பட்டார். அவருக்கு நான்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன.
காட்டிக் கொடுத்த பல்,
காசாவில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக வியாழக்கிழமை (அக்.17) மூன்று முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வரும் ஒருவராக இருக்கலாம் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியிருந்தது.
கொல்லப்பட்ட மூவரின் உடல்களும் டிஎன்ஏ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிவுகள் கிடைத்தபிறகே பயங்கரவாதிகள் குறித்த தகவல்களை உறுதி செய்ய முடியும் என்று கூறியிருந்தது.
டிஎன்ஏ பரிசோதனையில் கொல்லப்பட்ட மூவரில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வரும் ஒருவர் என்று தெரியவந்துள்ளது.
இறந்தவரின் பற்கள், கைரேகை இரண்டும் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், அவை ஹமாஸ் தலைவர் யஹ்யாவின் டிஎன்ஏ உடன் சந்தேகத்துக்கு இடமின்றி ஒத்துப் போவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.