டிஎஸ்பி - ஏடிஎஸ்பி ஆக முடியவில்லையே?காவல் அதிகாரிகள் ஏக்கம்! பதவி உயர்வு அளிக்காததால் பரிதாபம்!

ம.பா.கெஜராஜ்,
காவல் துறை பணியில் உள்ள அனைவருக்கும், உரிய நேரத்தில் பதவிஉயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கொஞ்சம் பலமாகவே எழுந்திருக்கிறது.
இது பற்றின விவரம் வருமாறு,
தமிழ்நாடு காவல் துறையில், கடந்த 1996 ஆம் ஆண்டு நேரடியாக சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு சேர்ந்தவர்கள் தற்போது ஓய்வு பெறும் நிலையில் கூடுதல் கண்காணிப்பாளராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு உரிய நேரத்தில் பதவி உயர்வு அளிக்கப்படாததால் காவல் துணைக் கண்காணிப்பாளாராக ரிடையர்டு ஆகிறார்கள். இத்தனைக்கும் அவர்களுக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன். மேலும் தமிழக காவல் துறையில் சுமார் 40 கூடுதல் கண்காணிப்பாளார் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அதே போல் 1997 ஆம் ஆண்டு நேரடியாக சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு டிஎஸ்பி ஆக பதவி உயர்வு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் உயரதிகாரிகளின் மெத்தனத்தால் அவர்கள் இன்ஸ்பெக்டர்களாகவே ஒய்வு பெறுகின்றனர்.
அதைவிட கொடுமை என்னவெனில் இவர்களுக்கு பின் காவல் துறையில் சேர்ந்த 12 ஆண்டு ஜூனியர்களுடன், ஒரே ரேங்க்கில் பணிசெய்யும் நிலையில் அவர்கள் உள்ளனர்.
இந்த பணி சுணக்கத்தால், 2011 நேரடி எஸ்.ஐ.யாகத் தேர்வு செய்யப்பட்ட வர்களுக்கும் இன்ஸ்பெக்டராகப் பதவி உயர்வு வழங்கப்படாத நிலை உள்ளதாகக் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் உரிய நேரத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று, பணி உயர்வு கிடைக்காமல் ஏங்கிக்கொண்டிருக்கும் காவல் அதிகாரிகள் கோரிக்கை முன்வைக்க உள்ளனர்.