ஏழு இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி வந்தனர்!கியூ பிரிவு பதற்றம்! நிதி கொடுத்த கலால் டி.எஸ்.பி!

ஏழு இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி வந்தனர்!கியூ பிரிவு பதற்றம்! நிதி கொடுத்த கலால் டி.எஸ்.பி!

  வ.மகேசு,

 இலங்கையிலிருந்து மேலும் 7 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி வந்தனர். 4 குழந்தைகள், 2 பெண்கள் உள்ளிட்ட அந்த 7 பேரும் தனுஷ்கோடி அருகே 1-ம் மணல் திட்டு பகுதியில் நின்று கொண்டிருந்தனர். இதனை அந்த வழியாக ரோந்து சென்ற கடலோர காவல் படையினர் பார்த்ததும்,கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

  இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அங்கு சென்று மணல் திட்டு பகுதியில் நின்று கொண்டிருந்த 7 பேரையும் மீட்டனர்.

  பின்னர், அங்கிருந்து அவர்களை படகு மூலம் கரைக்கு அழைத்து வந்தனர். பின்பு 7 பேரும் மண்டபம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் தமிழகத்திற்கு வந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

  அப்போது அவர்கள் இலங்கை திரிகோண மலையை சேர்ந்த தஷ்னுவாக் (வயது 40), அவரது மனைவி ரஜினி (30), மகன் யோஷ்வா (12), மகள்கள் ஏஞ்சல் (11), அனிஷ்கா (5), மதினா (40), அவரது மகன் சந்தானம் (12) ஆகியோர் என்பது தெரியவந்தது. இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழ வழியில்லாமல் தமிழகத்திற்கு வந்ததாகவும், நேற்று இரவு இலங்கையில் இருந்த படகில் புறப்பட்டு இன்று அதிகாலை தனுஷ்கோடிக்கு வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்தனர்.

 அபயம் தேடி தமிழகம் வந்த அவர்களிடம் 'கியூ' போலீசாரும் விசாரணை நடத்தினர். அவர்கள் 7 பேரையும் மண்டபத்தில் உள்ள இலங்கை மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

  இலங்கையில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 23 குடும்பங்களை சேர்ந்த 83 பேர் அகதிகளாக ராமேசுவரத்திற்கு வந்திருந்த நிலையில் இன்று வந்தவர்களுடன் சேர்த்து இலங்கையில் இருந்த இதுவரை 90 தமிழர்கள் அபயம் தேடி வந்துள்ளனர்.

   இலங்கை தமிழர்களுக்காக ஒரு மாத ஊதியத்தை வழங்கிய ஈரோடு மதுவிலக்கு டி.எஸ்.பி. 

  இந்நிலையில் ஈரோடு மதுவிலக்கு டி.எஸ்.பி. சண்முகம் தனது ஒரு மாத ஊதியமான ரூ.89 ஆயிரத்து 136-யை இலங்கை மக்களுக்கு உதவிடும் பொருட்டு தமிழக அரசுக்கு மாவட்ட போலீஸ் துறை வாயிலாக அனுப்பி வைத்துள்ளார். நல்ல மனிதர் என்று அவரை பாராட்டும் அரசு அலுவலர்களும் அள்ளி கொடுக்கலாமே?