471 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின் நிபந்தனை ஜாமீனில் வந்தார் செந்தில் பாலாஜி! இது விடுதலையல்ல என்கிறார் தமிழிசை!

ம.பா.கெஜராஜ்,
செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த போது சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கி சிறை சென்றார். இந்த வழக்கை திமுக சார்பில் தொடரப்பட்டது ஆகும். இந்நிலையில் அவர் தற்போது ஆளும் திமுகவில் இருப்பதால் அவரை வெளியில் கொண்டுவர திமுக படாதபாடுபட்டுவிட்டது.
அப்படியிருக்க ஒரு வழியாக உச்ச நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியிருக்கிறது. ஆகவே 471 நாட்களுக்குப் பிறகு புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியே வந்தார்.
அவரது வருகைக்காக சிறையின் வெளியே காத்திருத்த திமுக தொண்டர்கள் ஆர்பரித்து வரவேற்பு அளித்தனர்.அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "என் மீது அன்பும், நம்பிக்கையும், பாசமும் வைத்திருந்த கழகத் தலைவர் முதலமைச்சருக்கு வாழ்நாள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது போடப்பட்ட இந்த பொய்வழக்கில் இருந்து சட்டப் போராட்டம் நடத்தி மீண்டு வருவேன்" என்று கூறினார்.
இந்த வழக்கு பற்றின விவரம் வருமாறு,
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி மீது அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக 3 மோசடி வழக்குகளை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளின் அடிப்படையில் அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கின் மீதான குற்றப்பதிரிகை ஆகஸ்ட் மாதம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜி ஜாமினில் வெளிவர முயன்றார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அப்படியிருக்க செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 61 முறை நீட்டிக்கப்பட்டது. பின்னர் ஜாமீன் கோரிய வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு தீர்ப்புக்காக இந்த வழக்கை கடந்த ஆக.12ம் தேதி ஒத்திவைத்திருந்தனர்.
அதன் பின்னர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
அந்த வகையில், திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சாட்சிகளை கலைக்கவோ, அவர்களை சந்தித்துப் பேசவோ எவ்வித முயற்சியும் மேற்கொள்ளக்கூடாது. ரூ.25 லட்சத்துக்கு இருநபர் உத்தரவாதம் வழங்க வேண்டும், உள்ளிட்ட நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, ஜாமீன் உத்தரவாதங்களை எங்கு தாக்கல் செய்வது என்ற விவரங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படாததால் குழப்பம் ஏற்பட்ட நிலையில், செந்தில் பாலாஜியின் உறவினர்களான தியாகராஜன், சிவப்பிரகாசம் ஆகியோரது உத்தரவாதங்களை ஏற்று, செந்தில் பாலாஜியை விடுதலை செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
புழல் சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு அங்கு காத்திருந்த திமுக தொண்டர்கள் மலர்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். செந்தில் பாலாஜியை வாழ்த்தி முழக்கங்களை எழுப்பினர். செந்தில் பாலாஜியை வரவேற்க திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் சென்றிருந்தனர்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பதிவில், "செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டது தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின். எதிர்க்கட்சியில் இருக்கும் போது துரோகியாக இருந்தவர் தன் கட்சிக்கு வந்தவுடன் தியாகியா? செந்தில் பாலாஜி சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டா சிறை சென்றார். அவரை தியாகி என்று கூறுவதற்கு?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் இது ஜாமீன் தானே தவிர விடுதலை அல்ல என்ற தமிழிசை, "காவல் நிலையம் சென்று கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் சொன்னவரை அமைச்சர் ஆக்கி கையெழுத்து இட வைக்கலாமா? என சிந்திக்கிறது திமுக. முறைகேடு செய்வதில் உறுதியாக இருந்தவரை சிறையில் உறுதியாக இருந்தார் என்று பாராட்டுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்" என்று விமர்சித்துள்ளார்.