ரூ.3 லட்சத்து 98 ஆயிரத்து 299 மோசடி! ரிடையர் தேதியில் கமிஷனர் சஸ்பெண்டு!

ஜே.அருண் ஹென்றிக்ஸ்,
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி ஆணையாளராக சையது உசேன் என்பவர் பணியாற்றிய போது ரூ.3 லட்சத்து 98 ஆயிரத்து 299 மோசடி செய்துள்ள்ளார். ஆகவே அவர் ரிடையர்ட் ஆகும் தினத்தில் சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறார்.
இது குறித்த விவரம் வருமாறு,
புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி பகுதிக்கு தேவையான கொசு மருந்துகளை திருச்சியில் உள்ள ஒரு நிறுவனத்திடம் வாங்கிய வகையில் நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதார ஆய்வாளர் மோசடி செய்திருக்கிறார்கள்.
கடந்த 19-ந்தேதி புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு தேவையான 335 லிட்டர் கொசு மருந்துகளை திருச்சியில் உள்ள நிறுவனத்திடம் இருந்து வாங்கியதாகவும், அதற்காக ரூ.3 லட்சத்து 98 ஆயிரத்து 299 காசோலையாக செலுத்தப்பட்டதாகவும் நகராட்சி பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டது.
நகராட்சி தலைவர் ஜனார்த்தனன், துணைத்தலைவர் சிதம்பரம் மற்றும் நகராட்சியின் உறுப்பினர்கள் நகராட்சி பயன்பாட்டுக்கு வாங்கப்பட்ட கொசு மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளதா? என அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கொசு மருந்து இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து நகராட்சி அதிகாரியிடம் கேட்டனர். அவர் சரிவர பதில் அளிக்கவில்லை. இதையடுத்து நகராட்சி தலைவர் போலீசில் புகார் செய்தார். மேலும்
திருப்பூர் மண்டல நகராட்சி இயக்குனர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முறைகேடு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் அதை மூடிமறைக்கும் விதமாக நகராட்சி ஆணையாளர் சையது உசேன் கொசு மருந்துகளை ஒரு வேனில் அவசரமாக கொண்டு வந்து அலுவலகத்தில் இறக்கி வைத்தனர்.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், போலிசிலும் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து ஓய்வு பெறும் நாளில் நகராட்சி ஆணையாளர் சையது உசேன் மற்றும் சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.