பள்ளிக்கும், பெற்றோர்க்கும் பெருமை சேர்ந்திடும் வகையில் படியுங்கள்! மாணாக்களுக்கு ஆட்சியர் அட்வைஸ்!

பள்ளிக்கும், பெற்றோர்க்கும் பெருமை சேர்ந்திடும் வகையில் படியுங்கள்! மாணாக்களுக்கு ஆட்சியர் அட்வைஸ்!

க.பாலகுரு,

 திருவாரூர் ஒன்றியம், தண்டலை ஊராட்சி விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு நாளில் மாணவ, மாணவியர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கியும், ஆதார் எண் இணைக்கும் முகாமினையும் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்.பூண்டி கே.கலைவாணன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

  திருவாரூர் மாவட்டத்தில் 78 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 66 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 206 அரசு நடுநிலைப்பள்ளிகள், 596 அரசு தொடக்கப்பள்ளிகள்,  12 அரசு உதவிபெறும் உயர்நிலைப்பபள்ளிகள், 14 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள், 29 அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகள், 70 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகள் என 1071 பள்ளிகள் உள்ளன.

 கோடை விடுமுறை முடிந்து அவை திறக்கப்பட்டு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

  விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் வருகைப்புரிந்த மாணவ, மாணவியர்களை மாவட்ட ஆட்சியர்  வரவேற்று புத்தகங்களை வழங்கினார்.

  கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அன்றைய பாடங்களை அன்றைய தினமே படிக்க பழகி கொள்ள வேண்டும், கல்வியினையும், விளையாட்டினையும் ஒருங்கே பயில வேண்டும், உடல்நலத்தினை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும், படிப்புடன் ஒழுக்கத்தினையும் கற்று கொள்ள வேண்டும், பள்ளிக்கும், பெற்றோர்க்கும் பெருமை சேர்ந்திடும் வகையில் கல்வி பயில வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

 மேலும் நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் பதிவு அவசியமாக்கப்பட்டுள்ளது. கைவிரல் ரேகை, விழித்திரை பதிவு புகைப்படம் போன்ற விவரங்களின் அடிப்படையில் 12 இலக்கம் கொண்ட இந்த ஆதார் எண் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வழங்கப்படுகிறது.

 குறிப்பாக ஆதார் எண் அரசு திட்டங்கள் பெறவும் அவசியமான ஒன்றாக உள்ளது. ஆதார் வேண்டி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கும் போது தாமதமாவதை தவிர்க்கும் பொருட்டு பள்ளிகளில் ஆதார் அட்டை பெறும் வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் பள்ளிகல்வித்துறை புதிய சட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

 இதன் மூலம் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் முதல் 12 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள்  அனைவரும் ஆதார் அட்டையை எளிமையாக பெற்று கொள்ள முடியும் என்று பேசினார்.

  இந்நிகழ்வில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர் மாதவன், திருவாரூர் வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உடனிருந்தனர்.