சந்திரபாபு நாயுடு நாளை முதல்வர் பதவியேற்கிறார்! பிரதமர் கலந்துகொள்வாரா?

சந்திரபாபு நாயுடு நாளை முதல்வர் பதவியேற்கிறார்! பிரதமர் கலந்துகொள்வாரா?

வி.டி.வித்யாசாகர்,

  நாளை ஜூன் 12 ஆம் தேதி, ஆந்திர மாநிலத்தின் முதல்வராக மீண்டும் பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு.   இதற்கான நிகழ்ச்சி  நடைபெறவிருக்கும் நிலையில் அங்கு பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது.

  நடந்து முடிந்த மக்களவை தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டபேரவை தேர்தலும் நடைபெற்றது.  இந்த தேர்தலில் தெலுங்கு தேசம்,ஜனசேனா, பாஜக கூட்டணி வென்றது. 175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளையும், 25 மக்களவைதொகுதிகளில் 21 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி கண்டது.

   இந்த கூட்டணியில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். இவருக்கு வழங்கிய 21 பேரவை மற்றும் 2 மக்களவை தொகுதிகளிலும் தான் உட்பட தனது கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றிபெற செய்துள்ளார்.

இதனால் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி 164 தொகுதிகளை கைப்பற்றி ஜெகன் மோகன் ரெட்டி கட்சியை தோல்வியுற வைத்துள்ளது.

 ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 சட்டப்பேரவை மற்றும் 4 மக்களவை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது.

 அப்படியிருக்க, கிருஷ்ணா மாவட்டம், கன்னவரம் அருகே உள்ள கேசரபல்லி ஐடி பார்க் மைதானத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமான அரங்கில் நாளை சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வர் பதவி ஏற்க உள்ளார்.

 பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி வழங்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இம்முறை பாஜக, ஜனசேனா கட்சியினரும் அமைச்சரவையில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப் படுகிறது.

  பிரதமர் மோடி இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளார் என்று கூறப்பட்டாலும், ஏதாவது காரணம் சொல்லி தவிர்க்க நேரிடும் என்றே உறுதிபடுத்தப்படாத செய்திகள் சொல்கின்றன.

 ஆனால் மோடியை பதவியேற்பு விழா மேடையில் வைத்து ஆந்திரமாநில நலன்கள் பற்றி அவர் வாயாலேயே அறிவிக்க நாயுடு திட்டமிட்டிருக்கிறார், ஆகவே அவரை கண்டிப்பாக வரவைப்பார் என்றும் சொல்கிறார்கள்.

 மேலும் இதில் சில மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சாகள், முக்கியஸ்தர்கள் விழாவில் பங்கேற்கின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்வாரா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.