மோடியை பற்றியும் இறந்த லேடி பற்றியும் படியுங்கள்! திமுக மாணவரணிக்கு அமைச்சர் துரைமுருகன் ஐடியா!

மோடியை பற்றியும் இறந்த லேடி பற்றியும் படியுங்கள்! திமுக மாணவரணிக்கு அமைச்சர் துரைமுருகன் ஐடியா!

 ஜி.கே.சேகரன்,

 ஏலகிரியில் திமுக மாணவரணி சார்பில் கருத்தியியல் பயிலரங்கம் மூன்று நாட்கள் நடைபெறும் நிலையில், அந்த பயிற்சி பயிலரங்கத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவங்கி வைத்து பேசினார். அப்போது அவர்  பொதுகூட்டங்கள் நடத்தினால் மட்டுமே மக்களுடன் தொடர்பு ஏற்படும், மோடியை பற்றியும், இறந்த லேடியை பற்றி பேசுவதற்கு அவர்களை பற்றி படியுங்கள் என தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

 திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனைப்படியும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில்  கருத்தியியல் பயிலரங்கம் என்ற தலைப்பில் திமுக மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான பயிலரங்க கூட்டம் நேற்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. 

   தனியார் விடுதியில் நடைபெறும் இதில் திமுக மாணவரணி மாநில செயலாளரும், காஞ்சிபுரம் எம்எல்ஏவுமான எழிலரசன் தலைமையேற்றிருக்கிறார்.

  இதில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் பேசியதாக இந்த பயிலகத்தில் அனைவரும் பயன் படுத்திக் கொள்ளவேண்டும். உங்களை போல் மாணவனாக இருந்து வந்தவன் நான். 

   இன்று இருப்பது போல் அன்று வசதிகள் கிடையாது.  திமுக வே மாணவர்களால் உருவாக்கப்பட்டது தான். மாணவரணி தான் திமுக வுக்கு பக்க பலமாக இருந்தது.   இயக்கத்தில் இருப்பார்கள் ஆனால் சிலர் மட்டுமே கட்சிக்கு வருவார்கள். இயக்கத்தை பற்றியும், தலைவர்களையும் பற்றி முழுவதும் யார்  தெரிந்துக்கொள்வார்களோ அவர்கள் தான் கட்சிக்கு வருவார்கள்.

   இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பயிற்சிவகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் தான் கட்சியின் கொள்கைகளை பற்றி தெரிந்துக்கொள்ள முடியும். இந்த பயிற்சிவகுப்பை நடத்துகிற மாநில மாணவரணி தலைவர் எழிலரசனுக்கு பாராட்டுக்கள். நாம் வரலாற்றை தெரிந்தால் மட்டுமே வாழ்க்கை நடத்த முடியும்.மோடியை பற்றியும், இறந்த லேடியை பற்றியும் பேசுவதற்கு முன்பு அவர்களை பற்றி படியுங்கள்.

  நம்முடைய இனம் கெட்டுபோக காரணம் நம்முடைய வரலாற்றை மறந்ததுதான். பெரியார் இல்லை என்றால் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்து இருக்க முடியாது. அவரால் தான் இன்று எல்லோரும் படிக்க முடிகிறது.  தலைவர்களை புகழ்வது தவறல்ல. முதலில் படியுங்கள். நான் இன்றும் பெரியாரின் புத்தகங்களை படித்து வருகிறேன். அணிகளில் வருவது பெரிதல்ல கொள்ளைகளை புரிந்துக் கொள்ளவேண்டும். எதை பற்றி பேசினாலும் அதை பற்றி புரிந்துக் கொள்பவர்கள் மாணவர்கள் தான்.

 புதியதாக வரும் பேச்சாளர்களின் பேச்சை கேட்க ஆசையாக இருக்கிறது. அடிக்கடி பொதுக்கூட்டங்களை நடத்துங்கள். இப்போதெல்லாம் பொதுக்கூட்டங்கள் அவ்வளவாக நடத்தப்படுவதில்லை. அப்படி நடத்தினால் தான் நம்முடைய கொள்கைகள் சாதனைகள் எல்லாம் மக்கள் மத்தியில் போய் சேரும் என்று பேசினார்.