தாயகம் திரும்பிய பிரதமர்! சுற்றுப் பயணம் வெற்றி!

உ.சசிக்குமார்,
கடந்த 21ம் தேதி பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றார். இந்த பயணத்தின்போது அவர் வாஷிங்டனில் அமெரிக்க பாராளுமன்றத்தில் 2-வது முறையாக பேசி புதிய வரலாறு படைத்தார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அரசின் சார்பில் அவருக்கு பிரமாண்ட சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. இதையடுத்து, பிரதமர் மோடி வாஷிங்டனில் இருந்து எகிப்து நாட்டுக்கு அரசுமுறை பயணமாக தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.
அங்கு பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. 26 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் எகிப்து சென்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
எகிப்தின் ஹெலியோபொலிஸ் போர் நினைவிடத்திலும், உலக போரின்போது வீர மரணம் அடைந்த 3,799 இந்திய படைவீரர்கள் நினைவாக அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னத்தையும் பிரதமர் மோடி பார்வையிட்டு மரியாதை செலுத்தினார்.
மேலும், 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இந்தியாவைச் சேர்ந்த தாவூதி போரா சமூகத்தினரால் புதுப்பிக்கப்பட்டுள்ள அல்-ஹக்கீம் மசூதியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
மசூதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படம், பொருட்கள் உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி பார்வையிட்டார். அல்-ஹக்கீம் மசூதி நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. பிரதமர் மோடிக்கு எகிப்து நாட்டின் உயரிய விருது என கூறப்படும் ஆர்டர் ஆப் தி நைல் விருது வழங்கி அந்நாட்டு அதிபர் சிசி கவுரவித்தார். அதை தொடர்ந்து கெய்ரோவில் உள்ள மசூதிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில், எகிப்து பயணம் குறித்து பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "எகிப்து பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்தது. இந்த பயணம் மூலம் இந்திய- எகிப்து உறவு மேலும் பலப்படுத்தப்படும். எகிப்து அதிபர் மற்றும் அந்நாட்டு மக்களின் அன்பிற்கு நன்றி". இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்படியிருக்க அமெரிக்கா மற்றும் எகிப்து பயணங்களை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று மாலை இந்தியா புறப்பட்டார் இந்நிலையில், இரு நாட்டின் அரசு முறைப் பயணங்களை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று நள்ளிரவில் நாடு திரும்பினார். பிரதமர் மோடியை டெல்லி விமான நிலையத்தில் பாஜக தலைவர் ஜே.பி நட்டா, டெல்லி பாஜக தலைவர் வீரேந்திரா சச்தேவா மற்றும் கட்சி எம்பிக்கள் வரவேற்றனர்.
பிரதமரின் மேற்படி பயணங்கள் வெற்றிகரமாக அம்ய்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.