காதல் திருமணத்தை முறித்த சித்தி மீதுபோலிசில் புகார்!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவிபட்டினத்தை சேர்ந்த 24 வயதான சசிக்குமாரும், சோழபுரத்தை சேர்ந்த 20 வயதான மாரீஸ்வரி என்ற இளம் பெண்ணும் பள்ளி பருவம் முதல் காதலித்து வந்துள்ளனர். தற்போது சசிகுமார் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். மாரீஸ்வரி தனியார் ஆலையில் கூலி வேலை செய்துவருகிறார்.
கடந்த 15 ம் தேதி கோயிலில் ரகசிய திருமணம் செய்து கொண்ட இருவரும் இரண்டு நாட்கள் கொடைக்கானலில் தங்கி கணவன் மனைவியாக வாழ்ந்துள்ளனர். இதன்பின்னர் சசிகுமார், நடந்த திருமணத்திற்கு சம்மதம் கேட்டு கூட்டி செல்வதாக கூறி மாரீஸ்வரியை தென்காசி மாவட்டம் பச்சேரியில் உள்ள தனது சித்தி முனியம்மாள் வீட்டில் விட்டுவிட்டு தேவிப்பட்டினத்திற்கு திரும்பி உள்ளார்.
காதல் திருமணத்திற்கு சசிகுமாரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே மீண்டும் தனது மனைவியை அழைத்து வர சித்தி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது சசிகுமாரை வீட்டில் வைத்து பூட்டிய உறவினர்கள், மாரீஸ்வரியின் கழுத்தில் இருந்த தாலியை அறுத்து வீட்டை விட்டு துரத்தியுள்ளனர்.
தனது பெற்றோரின் உதவியுடன் சோழபுரத்திற்கு வந்த மாரீஸ்வரி மனம் உடைந்து பிளீச்சிங் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது மாரீஸ்வரி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
இது குறித்து மாரீஸ்வரி அளித்த புகாரின் பேரில் சசிகுமாரின் சித்தி முனியம்மாள் மற்றும் சித்தப்பா கனகராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தளவாய்புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.