மக்கள் கோபத்தை கட்டுப்படுத்த முடியாது!

மக்கள் கோபத்தை கட்டுப்படுத்த முடியாது!

 ம.பா.கெஜராஜ்

 காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் பக்கத்தில் ''மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை கொள்ளையடித்த கருணையற்ற மோடி அரசு தற்போது தாய், சகோதரிகள் மீது போலியான நல்லெண்ணத்தை காட்டி வருகிறது. 200 ரூபாய் மானியம் வழங்குவதன் மூலம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் கோபத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதை மோடி அரசு தெரிந்து கொள்ள வேண்டும்.

  இந்தியா கூட்டணியை பார்த்து பயப்படுவது நல்லது மோடி ஜி. பா.ஜ.க அரசை வீட்டிற்கு அனுப்பினால் தான் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியும் என்று மக்கள் நினைத்துவிட்டார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

   அவரைப்போலவே காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் (தகவல் தொடர்பு) ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:- மோடியால் திடீரென சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. இப்போது ஏன் என்று நீங்கள் கேட்கலாம்?. இரண்டு முறை இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் வெற்றிகரமாக ஆலோசனை கூட்டத்தை நடத்தி முடித்துள்ளனர். 3-வது கூட்டம் அடுத்த இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது.

   கர்நாடகா அரசு 100 நாட்களுக்குள் ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. ராஜஸ்தான் அரசு சிலிண்டரை 500 ரூபாய்க்கு வழங்கி வருகிறது. ஐந்து மாநில தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கும் நிலையில், உறுதியான தோல்வியை பா.ஜ.க. பார்த்துக் கொண்டிருக்கிறது. அதேபோல் மக்களை தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதம் இருக்கும் நிலையில்,  திருப்தியற்ற நிலையில் இருக்கிறது.

   பிரதமர் நாற்காலியில் மோடி ஒட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார். இதனால் இதுபோன்ற பரிசுகளை இன்னும் எதிர்பார்க்கலாம் என்றார்.

 அதே போல், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியிருப்பதாவது:- மோடி அரசு கடந்த 9.5 ஆண்டுகளாக 31.37 கோடி மக்களிடம் சிலிண்டர் விலையை உயர்த்தி கொள்ளை அடித்துள்ளது. அதுவும், 8.33 லட்சம் கோடியை மக்கள் பாக்கெட்டில் இருந்து கொள்ளையடித்துள்ளது. உஜ்வாலா திட்டத்தில் பயனடையும் பெண்கள் பாக்கெட்டில் இருந்து, 2017- ஆம் ஆண்டு முதல் 68,702.76 கோடி ரூபாயை வருவாயாக பெற்றுள்ளது.

   தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆறு மாதங்களுக்கு முன் நாட்டின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கி மோடி அரசு நினைவு கூர்ந்துள்ளது. மோடி ஜி, 9.5 ஆண்டுகள் மக்களிடம் இருந்து கொள்ளையடித்த 8,33,640.76 ரூபாயை இந்த 200 ரூபாய் மானியத்தால் இன்னும் சில மாதங்களில் ஈடுகட்ட முடியுமா?.

  68,702.76 கோடியை கொள்ளையடித்த உஜ்வாலா சகோதரிகளுக்குப் பிராயச்சித்தம் செய்வீர்களா?. 2024 தேர்தலில் நாட்டு மக்கள் நிச்சயமாக உங்களை அதிகாரத்தில் இருந்து இறக்கி, நீங்கள் கொடுத்த பரிசை, இதன் மூலம் திருப்பி கொடுப்பார்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.

 இவர்களைப்போலவே பல எதிர்கட்சியினர் இது குறித்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.