ஆமை வேகத்தில் மேம்பாலப்பணிகள்! மக்கள் தடாலடி!

ஆமை வேகத்தில் மேம்பாலப்பணிகள்! மக்கள் தடாலடி!

ஜி.கே.சேகரன்,

பொதுமக்கள் பயன்படுத்தி வந்த மேம்பால வழியை  மூடியதால் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் 2 கிமீ தொலைவிற்கு வரிசைகட்டி நின்ற வாகனங்கள்.

 திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில், சென்னை௹ பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

   மேம்பாலம் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில் மின்னூர் மற்றும் பழைய மின்னூர் பகுதிகளில் உள்ள மக்கள் கட்டுமானப் பணிகள் இடையே ஆபத்தான முறையில் கடந்து சென்று வருகின்றனர்.

   மேலும், மேம்பாலத்தின் நடுவே சாலையை கடக்க வழி இருந்தபோதிலும், அதனை தடுப்புகள் அமைத்து மூடியதால், பொதுமக்களும் மாணவர்களும் சாலையை கடக்க சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை சுற்றிச் சென்று கடந்து வருகின்றனர்.

 இந்நிலையில், இரவு நேரங்களில் சாலையை கடக்கும் போது விபத்துகள் ஏற்பட்டு பலர் காயம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது. .

   இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், மேம்பாலப் பணிகளை விரைவாக முடிக்க கோரியும் சாலையை கடக்க தற்காலிகமாக வழி ஏற்படுத்தி தரக்கோரியும் பெங்களூரு௹சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு பேரல்களை குறுக்கே வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

   தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினரும் தேசிய நெடுஞ்சாலைத் துறை பணியாளர்களும் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

   சாலையை கடக்க தற்காலிகமாக மாற்று வழி ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.இதனால், பெங்களூரு௹சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.