பயிர் காப்பீடு ரூ.28 லட்சம் வழங்க ஏ.ஐ,சி.க்கு உத்தரவு!

க.பாலகுரு ,
பயிர் காப்பீடு வழங்காத காப்பீட்டு நிறுவனத்தை (ஏ.ஐ,சி ), பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.28 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது .
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்ட சம்பா மழையில் சேதம் அடைந்தது. பயிர் காப்பீடுக்காக பிரிமீயம் செலுத்தியிருந்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
இதில் மன்னார்குடி சுற்றியுள்ள ராமாபுரம் சித்தாம்பூர், பாமினி சவளக்காரன், தேவங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டவில்லை.
இதையடுத்து விவசாயிகள் ராஜேந்திரன், ஸ்ரீதரன், கோவிந்தராஜ், இளையராஜா, பிரிமீயம் கட்டியிருந்த ரசீது உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்து காப்பீடு வழங்க உரிய அதிகாரிகளிடம் முறையிட்டு உள்ளனர். ஆனாலும் அவர்களுக்கு காப்பீடு வழங்கப்படவில்லை.
அவர்கள் நான்கு பேரும், தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு தொகையை, காப்பீடு நிறுவனம் வழங்க உத்தரவிட வேண்டும் என திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2019 ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி, புகார் தாரர்களான விவசாயிகள் நான்கு பேரும் முறையாக பிரிமியம் தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்துள்ளனர். அதன் பின்னரும் அவர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை.
எனவே காப்பீடு (ஏஐசி) நிறுவனம், பாதிக்கப்பட்ட விவசாயிகள் நான்கு பேருக்கும் வழங்கப்பட வேண்டிய பயிர் இழப்பீடுத் தொகை ரூ.14.60 லட்சமும், அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல், நிறுவனத்தின் சேவை குறைபாடு மற்றும் வழக்கு செலவுத் தொகை ஆகியவற்றிற்காக ரூ.13.40 லட்சம் என மொத்தம் ரூபாய் 28 லட்சம் வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார்.