ஆட்டம் காட்ட போகும் ஒ.பி.எஸ்! கொங்கு மண்டலத்தில் அதிமுக மாநாடு! சென்னையிலும் நடத்த முடிவு!

ம.பா.கெஜராஜ்,
கொங்கு மண்டலத்திலும், சென்னையிலும் ஓ.பி.எஸ். தலைமையில் அதிமுக மாநாடு நடத்தப்படும் - எங்களிடம் தான் பா.ஜ.க.கூட்டணி பேசிவருகிறது பேட்டி.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு அணியாகவும், ஓ.பன்னீர் செல்வமும் போட்டி போட்டுக்கொண்டு நிர்வாகிகளை அறிவிப்பதும், அறிக்கைகள் வெளியிடுவதாமாக இருந்து வருகின்றனர்.
அப்படியிருக்க ஓ.பன்னீர் செல்வம் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் திருச்சியில் மாநாடு ஒன்றை நடத்தினார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி பிரமாண்டமான மாநாட்டை ஆகஸ்டு 20-ந்தேதி நடத்த மதுரையில்திட்டமிட்டுள்ளாதாக தெரிகிறது.
அதே நேரத்தில் அ.தி.மு.கவின் அடிப்படை தொண்டர்களை அரவணைக்க வேண்டும் என்பதில் ஓ.பன்னீர் செல்வம் செயல்பட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமியால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் குறிவைத்து இழுத்து வருகிறார்.
இந்நிலையில், தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தை சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று கூட்டினா£ர். இந்த கூட்டம் எழும்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. இதில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்க வந்த மாவட்ட செயலாளர்கள், மண்டபத்தின் முன் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த நோட்டில் கையெழுத்திட்டனர். அவர்களுக்கு பேட்ஜ் வழங்கப்பட்டு ஒவ்வொருவராக அனுமதிக்கப்பட்டனர். காலை 11 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் கூட்டம் நடைபெறும் அரங்கத்துக்கு வந்தார்.
தொண்டர்கள் உற்சாக கோஷமிட்டு அவரை வரவேற்றனர். பின்னர் சிறிது நேரம் ஓ.பன்னீர்செல்வம் தனியாக தனது அணியை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து மேஜைக்கு வந்து அமர்ந்திருந்த நிர்வாகிகள் ஓ.பி.எஸ் வாழ்க என்று கோஷமிட்டனர்.
இதனைதொடர்ந்து நிர்வாகிகள் ஒவ்வொருவராக பேசினார்கள். அவர்களின் கருத்துக்களை ஓ.பன்னீர் செல்வம் கேட்டறிந்தார். எடப்பாடி பழனிசாமி மதுரையில் மாநாடு நடத்தும் நிலையில் அவருக்கு போட்டியாக கொங்கு மண்டலத்தில் மிகப்பிரமாண்ட அளவில் மாநாடு ஒன்றை நடத்த அதில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான நிர்வாகிகள் இந்த மாநாட்டை சேலம் அல்லது கோவையில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதன் மூலம் கொங்கு மண்டலத்தில் உள்ள தொண்டர்களின் ஆதரவை தங்கள் அணிக்கு பெற முடியும் என்ற கருத்தை நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்.
அதன்படி சேலத்தில் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த மாநாட்டை ஆகஸ்டு மாதமே நடத்தவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த மாநாட்டை தொடர்ந்து சென்னையிலும் ஒரு மாநாட்டை நடத்த ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ராஜலட்சுமி, நிர்வாகிகள் மகிழன்பன், வக்கீல் எம்.வி.சதீஷ், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ஜே.கே.ரமேஷ், எம்.எம்.பாபு, ரெட்சன், அம்பிகாபதி , அழகு மருதுராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓபிஎஸ் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமியுடன் இனி இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஒருமுறை இணைந்தற்கான நமக்குக் கற்பித்து விட்டனர். கொங்கு மண்டல மாநாடு உறுதியாக நடைபெறும். விரைவில் தேதி அறிவிக்கப்படும். கூட்டணி தொடர்பாக பாஜகவினர் எங்களுடன் பேசி வருகிறார்கள்.
அமைச்சரை பதவியில் இருந்து நீக்க அதிகாரம் உள்ளதா இல்லையா என்பது ஆளுநருக்கே தெரியவில்லை. ஆளுநரின் நடவடிக்கை சரியானது இல்ல என்று மத்திய அரசே சொல்லிவிட்டது" என்று சொன்னார்.
சென்னை: எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றே பேசி வந்த ஓ.பன்னீர்செல்வம், முதன்முறையாக எடப்பாடியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.