இந்தியா கூட்டணியை கலங்கடித்த நிதிஷ்குமார்! பாஜக ஆதரவுடன் 9-வது முறையாக முதல்வரானார்!

ம.பா.கெஜராஜ்,
கடந்த சில நாட்களாக இந்திய அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டவர் பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார். அவரை குறித்து வெளியான செய்திகளை மெய்பிக்கும் வகையில் அவர் தனது முதலமைச்சர் பதவியை நேற்று காலையில் ராஜினாமா செய்துவிட்டு, மாலையே பாஜக ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சரானார்.
நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை வீழ்த்துவோம் என்கிற கோஷத்துடன் ஒரு பெரிய மெகா கூட்டணியை ஏற்படுத்திய நிதிஷ்குமார், அவரது ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை அமைத்தார்.
ஆனால் இந்த கூட்டணி நிதிஷை அங்கீகரிக்கவில்லை. ஆகவே, அதிருப்தி அடைந்த நிதிஷ் கூட்டணி மாற முடிவு செய்தார்.
ஆகவே அவர் மகாகட்பந்தன் இக்கூட்டணியிலிருந்து கழற்றிக் கொண்டு மீண்டும் பாஜவுடன் கைகோர்க்க நிதிஷ் முடிவு செய்தார். தொடர்ந்து, நிதிஷ் குமார் நேற்று காலை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜ்பவனில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிதிஷ் குமார், ''இந்தியா கூட்டணிக்காக நான் எந்தளவுக்கு பாடுபட்டேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் மாநிலத்தில் மகாகட்பந்தன் கூட்டணியிலும் இந்தியா கூட்டணியிலும் அதற்கான அங்கீகாரம் எனக்கு கிடைக்கவில்லை. இந்த கூட்டணியில் எதுவும் சரியாக நடக்கவில்லை. அங்கு எந்த வேலையும் முறைப்படி நடக்கவில்லை. எனவே இரு கூட்டணிகளில் இருந்து விலக முடிவு செய்தேன்.
கட்சியில் அனைவரிடமும் ஆலோசனை கேட்ட பிறகுதான் இதுதொடர்பான முடிவு எடுக்கப்பட்டது'' என்றார்.
காலையில் முதல்வர் பதவியை நிதிஷ் ராஜினாமா செய்த நிலையில், மாலையில் புதிய அரசு பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடந்தது. இதில், பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது 9வது முறையாக நிதிஷ் குமார் பீகார் முதல்வராக பொறுப்பேற்றார்.
அவருக்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். நிதிஷுடன் துணை முதல்வர்களாக பாஜவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்கா ஆகியோர் பொறுப்பேற்றனர். மேலும், பாஜவின் மற்றொரு தலைவரான பிரேம் குமார், மஞ்சியின் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா (எச்ஏஎம்) கட்சியின் சந்தோஷ் குமார் சுமன், சுயேச்சை எம்எல்ஏ சுமித் சிங், ஐக்கிய ஜனதா தளத்தின் விஜய் குமார் சவுத்ரி, விஜேந்திர யாதவ் மற்றும் ஷ்ரவன் குமார் ஆகியார் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இந்நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மகள் ரோகினி ஆச்சார்யா, எக்ஸ் தளத்தில் ''குப்பை தொட்டிக்கு சென்றுவிட்டது குப்பை. அந்த அணியில் நாற்றம் அடிக்கட்டும்'' என விமர்சித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னரும் ரோகினி சர்ச்சைக்குரிய கருத்தை எக்ஸ் தளத்தில் தெரிவித்து பின்னர் அந்த கருத்தை நீக்கினார் என்பது நினைவுகூறதக்கதாகும்.