போலி வீடியோவால் வெறிகொண்டு செயல்பட்ட மணிப்பூர் மைதேயி இன வாலிபர்கள்! குகி பழங்குடி பெண்கள் நிர்வாண படுத்தப்பட இதுவே காரணம்!தூண்டிவிட்ட சக்தி?

ம.பா.கெஜராஜ்,
மணிப்பூரில் கலவரம் உருவான மே 3-ந் தேதி இரவு சமூக வலைதளங்களில் ஒரு மோசமான காட்சி பரவியது. அதில் ஒரு பெண் பிளாஸ்டிக்கால் சுற்றப்பட்டு கிடப்பது போன்று காட்சிகள் இடம் பெற்று இருந்தன. அந்த காட்சிகளுக்கு கீழே மணிப்பூரில் மைதேயி இனத்தை சேர்ந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளார் என்ற வாசகங்கள் இடம் பெற்று இருந்தன.
இதனால் வெறிகொண்டு ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற மைதேயி இன வாலிபர்கள் பழிக்கு பழி, என்று கங்கணம் கட்டிக்கொண்டு குகி இன பெண்களை குறிவைத்து செய்த செயல் இந்தியாவை இன்று உலக நாடுகள் கரித்துக் கொண்டிருக்கின்றன.
மணிப்பூர் கலவரத்தில் பழங்குடியின பெண்கள் இருவர் ஆடைகள் இன்றி ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்ட கொடூர சம்பவத்தின் முக்கிய பின்னணி இதுதான், என்றாலும் கூட மைதேயி இன பெண் கொலை செய்யப்பட்டதை போல பரப்பியது யார் என்பதைப் பற்றி தான் இப்போது முக்கியமாக விசாரணை செய்ய வேண்டியுள்ளது.
அந்த வகையில் இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. குறிப்பாக குகி இன பெண்கள் மீதான பாலியல் கொடூரத்துக்கு ஒரு போலி வீடியோ காட்சி வதந்தியாக பரவியதுதான் காரணம் என்பதை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். உண்மையில் பிளாஸ்டிக்கால் சுற்றப்பட்டிருந்த பெண் மைதேயி இன பெண்ணே அல்ல. அதாவது அந்த வீடியோ காட்சியில் இடம் பெற்றிருந்த பெண் டெல்லியை சேர்ந்தவர் ஆவார். டெல்லியில் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு, பிளாஸ்டிக்கால் சுற்றி வீசப்பட்ட காட்சிதான் அது.
வன்முறையை தூண்டிவிட்ட சக்திகள், இந்த கற்பழிப்பு கொலையை மணிப்பூரில் நடந்தது போன்று சித்தரித்து போலி வீடியோ தயாரித்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டனர். அது மணிப்பூரில் எரிந்து கொண்டிருந்த கலவரத்தீயை மேலும் பற்றி எரிய வைத்துவிட்டது.
இது மணிப்பூரில் மே 3-ந் தேதி இரவு காட்டுத்தீ போல பரவியது. அந்த வீடியோ காட்சியை கண்ட மைதேயி இன மக்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். தங்கள் இனத்தை சேர்ந்த ஒரு பெண்ணை குகி இனத்தவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து வீசி இருப்பதாக நம்பி ஆத்திரப்பட்டனர்.
போலி வீடியோ காட்சிகளால் வெறிபிடித்த மனித விலங்குகள் குகி இன பெண்களை இப்படி நிர்வாணப்படுத்தி கொடுமை செய்திருக்கிறார்கள். இந்த சம்பவத்தை தூண்டிவிட்ட சக்திகளை மக்கள் அடையாளம் கண்டு செயல்படுவார்கள் என்பதில் அய்யமேதுமில்லை,
இது போன்ற மனிதாபிமானமற்ற செயல் இனி இந்தியாவில் மட்டுமின்றி உலகத்தில் வேறெங்கும் கூட நடந்துவிடக்கூடாது ஆண்டவரே.