இடையர்களிடமிருந்து கற்றுக் கொள்வோம்! பேராயர் ஹெ.சர்மா நித்தியானந்தம் கிறிஸ்துமஸ் வாழ்த்து

ஜி.எஸ்.மேத்யூராஜ்,
கொரோனா பெரும் தொற்று சற்று ஓய்வெடுக்க சென்றுவிட்ட நிலையில் உலகில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கலைகட்டிவிட்டது.
இந்நிலையில் தென்னிந்திய திருச்சபையின் வேலூர் பேராயர் அய்யா ஹெ.சர்மா நித்தியானந்தம் அவர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். வாழ்த்து செய்தியை பார்ப்போம்,
கிறிஸ்து பிறப்பு என்றவுடன் நமது உள்ளங்களில் மிகுந்த மகிழ்ச்சி,ஆடை அலங்காரம், ஆபரணங்கள், கேக் உள்ளிட்ட உணவு வகைகள் என்று வரிசைக்கட்ட, இது ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொள்கிற ஒரு திருநாள் என்பதே நிதர்சனம். குறிப்பாக ஏழை எளியோர்களை இந்த தருணத்தில் கூடுதலாக மகிழவைக்க வேண்டும். பொருளதவிகள் அதில் இடம் பெருமாறு பார்த்துக் கொள்வோம்.
உலகம் முழுவதும் அப்படித்தானே கொண்டாட்டப்படுகிறது.
பைபிளில் லூக்கா நற்செய்தி நூல் அதிகாரம் 2: வசனங்கள்8-20 ஆகியவற்றில், இயேசுவின் பிறப்பைத் தொடர்ந்து நிகழ்ந்த இடையர்கள் வானதூதர்களின் சந்திப்பு பற்றி அற்புதமாக குறித்து வைக்கப்பட்டிருக்கிறது.
அதில் இயேசுவின் பிறப்புச் செய்தி, வானதூதரின் விளக்கம் , விண்ணக தூதர் பேரணி ( சேனைகள் ) போற்றுதல், இடையர்களின் உடனடிச் செயல்பாடு இவைகள் தான் இதில் பிரதானம்,
அக்காலத்தில் இடையர்கள் மற்ற மக்களைவிட தாழ்வானவர்களாகக் கருதப்பட்டனர்.
அப்படியிருக்க, எந்த ஒரு சமூகம் வாழக்கூடாது என அழித்தொழிக்கப்பட்டதோ? அச்சமூகத்தின் வழியே, வாழ்வை வழங்கும் இறை மகனின் பிறப்பு குறித்து பிறருக்கு அறிவிக்கப்பட வேண்டுமென கடவுள் எண்ணியிருப்பாரோ என எனக்குத் தோன்றுகிறது.
ஏனெனில் அவர்கள் வானதூதர்களுடன் இணைந்து, இயேசு பிறப்பை இந்த உலகத்துக்கு தெரிவித்தவர்கள். குறிப்பாக வேதத்தில் உரைக்கப்பட்ட செய்தியாதெனில் ஆண்டவர் இயேசுவின் பிறப்புச் செய்தி வானதூதர்களால் மந்தையைக் காத்துக் கொண்டிருந்த இடையர்களுக்கு முதன்முதலாக அறிவிக்கப்பட்டதை தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஒட்டு மொத்த யூத மக்களும் தங்களுக்கான மெசியா வருவார் என்ற எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருந்தனர். அவ்வரிசையில் இடையர்களும் மீட்பருக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.
எருசலேம் கோவிலில் பலியிடப்படும் ஆடுகள் பெரும்பாலும் எருசலேமைச் சுற்றிலுமிருந்தே விலைக்கு வாங்கப்பட்டதாகக் கூறுவர். இந்த இடையர்களே பலியிடுவதற்கான ஆடுகளை மேய்த்தும் அதனை விற்பனை செய்தும் வந்தனர்.
இனி ஆடுகள் அல்ல, இறைமகனே பாவம் தீர்க்கும் பவியாக, இறை ஆட்டுக் குட்டியாக , பாவம் போக்கும் செம்மறியாக பலியாகப் போகிறார். அவர் உங்களுக்காகப் பிறந்திருக்கிறார் என்ற கருத்து அதனுள் அடங்கியிருக்கிறது.
கவனியுங்கள், இயற்கையோடு இணைந்து வாழுந்து பல்வேறு நற்குணநலன் கொண்டவர்களையே கடவுள் நற்செய்தி அறிவிக்கும்படி தெரிவு செய்தார்.
வானதூதரால் உரைக்கப்பட்ட செய்தியில் பல்வேறு கூறுபாடுகள் அடங்கியிருக்கின்றன. முதலாவது நீங்கள் அஞ்சாதீர்கள் என இடையர்களிடம் கூறியதோடு நில்லாமல் எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை அறிவிக்கிறேன்.
இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள் இதுவே உங்களுக்கு அடையாளம் " என்றார்.
வானதூதர்களின் வார்த்தைகளை அப்படியே கடைபிடித்த இடையர்கள், இயேசுநாதரின் பிறப்பு அதிசயத்தை உலகெங்கும் பறைசாற்ற உதவினார்கள்.
கீழ்படிதல், நம்புதல், அர்பணித்தல் ஆகியவை அவர்களிடம் ஓங்கி வெளிப்பட்டது.
இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை கடைபிடிக்கும் நாம் வானதூதர்களின் சொல்கேட்டு செயல்பட்ட இடையர்களின் போக்கை கடைபிடிப்போம்.
அன்பு, பண்பு, பாசம், உறவுகள் ஒன்றுக் கூடல், ஈதல், ஒழுக்கம், மற்றவர்களுக்கு உதவுதல் போன்ற நற்பண்புகளை கையாண்டு வாழ்வில் வளம் பல பெற ஆண்டவரின் அருளாசியை உங்களுக்கு வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
2021 ஆம் ஆண்டில் நம்மை நல்லபடியாக வழிநடத்திய ஆண்டவர் வரும் 2022 ஆம் ஆண்டில் எந்த நோய் நொடி இன்றி, செல்வம், புகழ் அனைத்தும் பெற்று வாழ வாழ்த்துகின்றேன்.